17 வயசுதான்.. இன்ஸ்டா ரீல்ஸ் மோகம்.. கடைசியில் நடந்த விபரீதம்.. தடதடத்த தெலுங்கானா
ஹைதராபாத்: தண்டவாளம் அருகே நின்று கொண்டு ரீல்ஸ் வீடியோ செய்த சிறுவன் மீது ரயில் மோதியதில் அவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் 'லைக்ஸ்' வாங்குவதற்காக இன்றைய இளைஞர்கள் செய்யும் செயல்கள் வேடிக்கையாகவும், பரிதாபமாகவும் இருக்கின்றன. 'லைக்ஸ்' எண்ணிக்கை கொஞ்சம் அதிகரித்து விட்டாலே தன்னைத் தானே 'செலிபிரிட்டி' ரேஞ்சுக்கு நினைத்துக் கொள்ளும் இளைஞர்கள், அதன் பின் சமூக வலைதளமே கதி என ஆகி விடுகின்றனர். எப்போது பார்த்தாலும் செல்ஃபி, ரீல்ஸ் வீடியோ என தங்கள் வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர்.
இதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுவதுடன் சில நேரங்களில் 'லைக்ஸ்' மோகமானது அவர்களின் உயிருக்கே ஆபத்தை உண்டு பண்ணிவிடுகிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் வரும் லைக்ஸ்களுக்காக உயிரை விட்ட இளைஞர்கள் ஏராளம். அதுபோன்ற ஒரு பரிதாப சம்பவம்தான் தெலங்கானாவில் நடைபெற்றிருக்கிறது.

ரீல்ஸ் மோகம்
தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள வடேபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் அக்ஷய் ராஜ் (17). இவர் அங்குள்ள பியுசி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை கூலித் தொழிலாளி ஆவார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், அக்ஷய் ராஜ் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள ஹனுமாகொண்டா மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு பல இடங்களை சுற்றி பார்த்த நண்பர்கள், காளிபேட் ரயில் நிலையத்துக்கு வந்துள்ளனர். அப்போது, அக்ஷய் ராஜ் தன்னை வைத்து ரீல்ஸ் வீடியோ செய்யுமாறு நண்பர்களிடம் கூறியுள்ளார்.

ரயில் அருகே சென்றால்தான் 'கெத்து'
ரயில் வரும் போது அதன் அருகே நடந்து செல்வதை போல ரீல்ஸ் வீடியோ செய்ய நண்பர்கள் முடிவு செய்தனர். அதன்படி, அங்கு வந்த இரண்டு, மூன்று ரயில்களுக்கு அருகே அக்ஷய் ராஜ் நடந்து சென்றார். ஆனால் ரயிலில் இருந்து அவர் தூரமாக நடந்து சென்றதால் அவரது நண்பர்களுக்கு அது பிடிக்கவில்லை. ரயில் அருகே நடந்து சென்றால் தான் 'கெத்து' என்றும், வீடியோவுக்கும் அதிக லைக்ஸ் வரும் எனவும் நண்பர்கள் கூறியுள்ளனர்.

மோதியது ரயில்
அந்த சமயத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வேகமாக வந்துள்ளது. இதையடுத்து, ரயில் வரும் போது அதன் அருகே இருக்க வேண்டும் என்பதற்காக தண்டவாளத்தை ஒட்டி அக்ஷய் ராஜ் நடந்து சென்றார். அவரது நண்பர்களும் அதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த ரயில் அக்ஷய் குமார் மீது மோதியது.

கவலைக்கிடம்
இதில் பல அடி தூரத்துக்கு அவர் தூக்கி வீசப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவரது நண்பர்கள் அவரை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தலையின் பின் பகுதியில் ரயில் மோதியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். ஒன்றுக்கும் உதவாத ரீல்ஸ் வீடியோவுக்காக உயிரை பணயம் வைத்து, இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் இனியாவது திருந்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications