இன்னொரு சுஜித்.. 120 அடி ஆழத்தில் விழுந்த குழந்தை.. பக்கவாட்டு பள்ளம் தோண்ட தோண்ட கீழே சரிந்து..ஷாக்
தெலுங்கானா சிறுவன் போர்வெல்லில் விழுந்து சடலமாக மீட்கப்பட்டான்
மேடக்: இன்னொரு சுஜித் நம்மை விட்டு போய்விட்டான்.. 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை மீட்கும் பணி 2 நாளாக நடந்தும், அவனை காப்பாற்ற முடியவில்லை.. இதனால் மக்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
Recommended Video
தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ளது பொடிச்சன் பள்ளி என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் பிக்ஷபதி.. இவர் ஒரு விவசாயி.
இவரது கிராம சூழல் முழுவதுமே வறட்சியின் பிடியில் உள்ளது.. விவசாயம் முற்றிலும் அழிந்துவிட்டது.. தண்ணீர் பஞ்சம் அந்த பகுதியில் தாண்டவமாடுகிறது... வாழ்வாதாரத்தை காத்து கொள்ள ஏதாவது வழி தேடினார் பிக்ஷபதி.

ஆழ்துளை கிணறு
அப்போதுதான் தன்னுடைய வயலில் புதிதாக ஆழ்துளைக் கிணறு தோண்ட ஆரம்பித்தார்.. 2 இடங்களில் ஆழ்துளைக் கிணறு தோண்டியும் அங்கு தண்ணீர் வராத நிலை.. எனினும் மனம் தளராத பிக்ஷபதி, 3வதாக ஒரு இடத்தில் ஆழ்துளை கிணறு தோண்டினார்.. அங்குதான் தண்ணீர் வந்துள்ளது.. இந்த கிணற்றில் தண்ணீர் வருவதை பார்த்ததும் ஏற்கனவே தோண்டிய 2 கிணறுகளையும் மூடாமல் அப்படியே விட்டுவிட்டார்.

சாய் வர்தன்
இந்த சமயத்தில்தான் இவரது மைத்துனர் கோவர்தனின் 3 வயது மகன் சாய் வர்தன், மாமா பிக்ஷபதி வீட்டிற்கு வந்திருந்தான்.. வெளியே அவன் மட்டுமே தனியாக விளையாடி கொண்டிருந்தான். அந்த சமயத்தில், விவசாய நிலத்தில் மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட்டான்.. அதுத 120 அடி ஆழம் கொண்டது... ஆனால் குழிக்குள் விழும்போதே சிலர் இதை பார்த்துள்ளனர்.. அதனால் உடனடியாக குடும்பத்தினருக்கு ஓடிவந்து தகவல் சொல்லவும், சிறுவனை மீட்கும் முயற்சி அப்போதே ஆரம்பித்தது.

மீட்பு பணி
ஆனால், உடனடியாக இவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவலை சொல்லாமல், தாங்களாகவே அந்த குழிக்கு பக்கத்திலேயே இன்னொரு குழியை தோண்டி சிறுவனை வெளியே எடுக்க முயன்றனர். இதை பார்த்த ஒருசிலர், போலீசாருக்கும், வருவாய்த்துறை அதிகாரிகள், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் சொன்னார்கள். அதன்பிறகு அவர்களும் விரைந்து வந்து மீட்புப் பணி முடுக்கிவிடப்பட்டது.

ஆக்ஸிஜன்
முதலில் குழிக்குள் சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்படாமலிருக்க ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது... அந்த கிணறு 120 அடி ஆழம் என்றாலும், சிறுவன் விழுந்தது சுமார் 20 அடி ஆழத்தில்தான்.. இருந்தாலும் அவனை மீட்கும் முயற்சி தோல்வி அடைந்து கொண்டே இருந்தது.. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நுட்பத்தை பயன்படுத்தி குழந்தையை எடுக்க 2 நாளாக பாடுபட்டனர்.

தேசிய பேரிடர் குழு
போர்வெல் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அதன்மூலமும் இன்னொரு கிணறு தோண்டப்பட்டது. இரவு நேரமானதால் விளக்குகள் பொருத்தப்பட்டு மீட்பு பணிகள் நடந்தன.. ஆனால் அந்த அதிர்வுகள் காரணமாகவோ அல்லது மண்ணின் தன்மையோ தெரியவில்லை.. இறுதியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சடலமாக இன்று காலை அவனை மீட்டனர்.

விழிப்புணர்வு இல்லை
சுஜித் இறந்தபோதே, காவு வாங்கும் இந்த ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என்ற உத்தரவு போடப்பட்டது.. ஆனால் அவைகளை யாரும் தீவிரமாக நடைமுறைப்படுத்தாததைதான் இது எடுத்து காட்டுகிறது.. குறிப்பாக கிராமப்புறங்களில் இதுபோன்ற தொடர்ச்சியான மரணங்கள் ஏற்படுவதை தடுக்க இனியாவது அரசு சுதாரித்து கண்காணிக்க வேண்டும்.

இழப்புகள்
நடுக்காட்டுப்பட்டியில் பல மணி நேரம் போராடியும் சுஜித்தை நம்மால் மீட்கவில்லை.. அதேபோலதான் 2 நாளாக போராடியும் சாய் வரதனையும் மீட்கமுடியவில்லை... விழிப்புணர்களை தீவிரப்படுத்த வேண்டி உள்ளது.. ஏற்கனவே ஒவ்வொரு இழப்புகளையும் சந்தித்து நொந்து போயுள்ள மக்களுக்கு சாய் வரதனின் மரணம் மேலும் நிலைகுலைய வைத்து வருகிறது.












Click it and Unblock the Notifications