முஸ்லிம் இளைஞர் டெலிவரி செய்ததால் உணவை வாங்க மறுப்பு... ஸ்விக்கி நிறுவனம் போலீசில் புகார்
ஹைதராபாத்: முஸ்லிம் இளைஞர் டெலிவரி செய்ததால் ஸ்விக்கியில் ஆர்டர் செய்த உணவை வாடிக்கையாளர் ஒருவர் வாங்க மறுத்த சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உணவை வாங்க மறுத்தவர் மீது போலீசில் ஸ்விக்கி நிறுவனம் புகார் அளித்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வாடிக்கையாளர் ஒருவர் ஸ்விக்கில் சிக்கன் 65 ஆர்டர் செய்திருக்கிறார்.
அவர் தனது டெலிவரி குறிப்பில் இந்து மதத்தைச் சேர்ந்தவர் தான் தனக்கான உணவை டெலிவரி செய்ய வேண்டும் என்று பதிவிட்டு இருந்தார்.

உணவை வாங்க மறுப்பு
ஆனால் ஸ்விக்கி நிறுவனம் அப்படி ஒரு வசதி இல்லாததால் முஸ்லீம் இளைஞரை அவருக்கு உணவு டெலிவரி செய்ய அனுப்பி வைத்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாடிக்கையாளர் தான் இந்து வாடிக்கையாளர் தானே டெலிவெரி செய்ய வேண்டும் என்று கேட்டேன் என்று கூறி உணவை வாங்க மறுத்துவிட்டார்.

ஜோமாட்டோ
இதையடுத்து ஸ்விக்கி நிறுவனம் உணவை வாங்க மறுத்த வாடிக்கையாளர் மீது போலீசில் புகார் அளித்துள்ளது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். முன்னதாக மத்திய பிரதேசத்தில் இதேபோன்ற சம்பவம் ஜோமாட்டோ உணவு டெலிவரியின் போது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்தது.

தானியாங்கி முறை
இந்நிலையில் ஸ்விக்கி நிறுவனம் ஹைதராபாத் சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்கள் பன்முகத்தன்மையைத் தழுவி வெவ்வேறு கண்ணோட்டங்களை மதிக்கிறோம். ஒவ்வொரு ஆர்டரும் தானாகவே டெலிவரி நிர்வாகிகளுக்கு அவர்களின் இருப்பிடம் மற்றும் கிடைக்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஒதுக்கப்படும்,

முஸ்லிம் ஓட்டல்
தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் அல்ல. ஒரு அமைப்பாக, எங்கள் நிறுவன பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் எந்த அடிப்படையிலும் நாங்கள் பாகுபாடு காட்டுவதில்லை என்று கூறியுள்ளது. இதனிடையே சர்ச்சையை ஏற்படுத்திய வாடிக்கையாளர், ஒரு முஸ்லிம் ஓட்டலில் இருந்துதான் அந்த உணவை வரவழைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications