தெலுங்கானா: கேசிஆர் Vs சோனியா..புயலை கிளப்பும் 'திராவிட' மாடல் வாக்குறுதிகள்- ஜெயிக்கப் போவது யாரு?
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் ஆளும் பிஆர்எஸ் கட்சி தமது அதிரடியாக "திராவிட மாடல்" தேர்தல் வாக்குறுதிகளை இன்று அறிவித்தது.
தெலுங்கானா சட்டசபைக்கு நவம்பர் 30-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு அதிரடியான தேர்தல் வாக்குறுதிகளே காரணம். அதனால் அந்த வாக்குறுதிகளை உடனடியாக செயல்படுத்தியது கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ். இதே பாணியில் தெலுங்கானா சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். இது தெலுங்கானா தேர்தல் களத்தில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக தேர்தல் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இதனால் ஆளும் பிஆர்எஸ் கட்சியும் இதேபோல தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனடிப்படையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் 2021 சட்டசபை தேர்தலில் திமுக முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகளையே - திராவிட மாடல் வாக்குறுதிகளையே காங்கிரஸும் பிஆர்எஸ்-ம் தற்போது முன்வைத்துள்ளது.
பிஆர்எஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்:
- தெலுங்கானாவில் உள்ள தலித் குடும்பங்களுக்கு தொழில் தொடங்க அல்லது விவசாயத்தில் முதலீடு செய்ய ரூ.10 லட்சம் மானியம்
- கே.சி.ஆர் பீமா திட்டம் மாநிலத்தில் 93 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கும்.
- மூத்த குடிமக்கள், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக ஓய்வூதியம் மாதம் ரூ.2,016ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்படும்
- மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் மாதம் ரூ.6,000 ஆக உயர்த்தப்படும்.
- தகுதியுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 400 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும்
- தகுதியுடைய அனைத்து வாக்காளர்களுக்கும் ரூ.15 லட்சம் சுகாதார காப்பீடு வழங்கப்படும்
- ஹைதராபாத்தில் மேலும் ஒரு லட்சம் டபுள் பெட்ரூம் வீடுகள் கட்டப்படும்.
தெலுங்கானா தேர்தல் பிரசாரத்தின் போது மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்:
- குடும்பத் தலைவிகளுக்கு மகாலட்சுமி திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 2,500 உதவித் தொகை வழங்கப்படும்.
- சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ. 500க்கு வழங்கப்படும்.
- அரசு பேருந்தில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கும் திட்டத்தை செயல்படுத்துவோம்.
- தெலுங்கானா தனி மாநில அமைக்க போராடியவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கப்படும்
- வீடுகட்ட ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.
- வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.
- விவசாயிகள், குத்தகை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ15,000 வழங்கப்படும்.
- விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ12,000 நிதி உதவி வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications