"முடியாது".. மோடியை அழைக்க போக மாட்டேன்.. ஏர்போர்ட்டுக்கு அமைச்சரை அனுப்பும் கேசிஆர்.. பரபர மோதல்!
ஹைதராபாத்: பிரதமர் மோடியை அழைக்க ஏர்போர்ட் செல்ல மாட்டேன் என்று தெலுங்கானா முதல்வர் கே சந்திசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
சமீப நாட்களாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிற்கும் பாஜகவிற்கு இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. முக்கியமாக ஹுசாராபாத் இடைத்தேர்தலில் இருந்து இரண்டு தரப்பிற்கும் இடையிலான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
சமீபத்தில்தான் மத்திய பட்ஜெட்டை கேசிஆர் மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். பிரதமர் மோடியையும், பாஜகவையும் கடுமையாக விமர்சனம் செய்து கேசிஆர் அறிக்கையும் வெளியிட்டு இருந்தார்.

கேசிஆர் விமர்சனம்
சமீபத்தில் பட்ஜெட் குறித்து பேசிய கேசிஆர் பிரதமர் மோடிக்கு தொலைநோக்கு பார்வையே இல்லை. பாஜகவிற்கு வெட்கம் இல்லை. அந்த கட்சியை வங்கக்கடலில் வீசி எறிந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். பிரதமர் மோடிக்கு விதவிதமாக தொப்பி போடவே நேரம் சரியாக இருக்கிறது. பஞ்சாப் சென்றால் டர்பன், தமிழ்நாடு வந்தால் லுங்கி என்று தோற்றத்தை மாற்றுகிறார். ஆனால் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

மத்திய அரசு மோசம்
மத்திய அரசு நடந்து கொள்ளும் விதத்தை பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. பிரதமர் மோடி குறுகிய மனப்பான்மை கொண்டு இருக்கிறார். மக்களை பாஜக ஏமாற்றிவிட்டது. மத்திய பட்ஜெட் என்பதே கோல்மால் பட்ஜெட்தான். நாட்டில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்காக நாடு முழுக்க பல லட்சம் மக்களை நான் சந்தித்துள்ளேன். விரைவில் நான் என்னுடைய முன்னேற்ற பாலிசி திட்டங்களை அறிவிப்பேன் என்று கேசிஆர் காட்டமாக குறிப்பிட்டார்.

வைரல்
இவரின் பேச்சு மத்திய பாஜக தலைவர்கள் இடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் தற்போது தெலுங்கானா வரும் பிரதமர் மோடியை நேரில் சென்று அழைக்க மாட்டேன் என்று கேசிஆர் தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில் 216 அடி உயரம் உள்ள ஒற்றுமைக்கான சிலை எனப்படும் ஸ்ரீ ராமானுஜ ஆச்சார்யா சிலையை திறந்து வைக்க பிரதமர் மோடி வருகிறார். இதற்காக இன்று ஹைதராபாத் விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வருகிறார்.

ஒரே மேடை
இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவில் ஒரே மேடையில் மோடி, கேசிஆர் கலந்து கொள்ள இருந்தனர். ஆனால் தற்போது பிரதமர் மோடியை அழைக்க விமான நிலையம் செல்ல மாட்டேன் என்று கேசிஆர் தெரிவித்துள்ளார். விலங்குகள் நலத்துறை அமைச்சர் ஸ்ரீனிவாஸ் யாதவை விமான நிலையத்திற்கு அனுப்பி கேசிஆர் முடிவு செய்துள்ளார். அதோடு ஒரே மேடையில் மோடி, கேசிஆர் ஒன்றாக தோன்ற வாய்ப்பு குறைவு என்றும் கூறப்படுகிறது.

மம்தா
பொதுவாக பிரதமர்கள் வரும் போது எவ்வளவு மோதல் இருந்தாலும் மாநில முதல்வர்கள் செல்வது வழக்கம். ஆனால் கடந்த முறை பிரதமர் மோடி மேற்கு வங்கம் சென்ற போது கொல்கத்தா விமான நிலையத்திற்கு மம்தா பானர்ஜி செல்லவில்லை. தற்போது அதே பாணியில் கேசிஆரும் பிரதமர் மோடியை அழைக்க செல்ல முடியாது என்று கூறியுள்ளார். 2014ல் பின் முதல் முறை பிரதமர் மோடியை கேசிஆர் வரவேற்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பாஜக டிஆர்எஸ் கட்சிகளுக்கு இடையே மோதல் பெரிதாகி உள்ளது.












Click it and Unblock the Notifications