தெலுங்கானாவில் 7,000 தனியார் பேருந்துகளுக்கு அனுமதி..? கே.சி.ஆர். யோசனை
ஹைதராபாத்: தெலுங்கானாவில் அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், 7,000-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளுக்கு சிறப்பு அனுமதி வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறது அம்மாநில அரசு.
ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தெலுங்கானாவில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் போக்குவரத்து சேவை அம்மாநிலத்தில் அடியோடு முடங்கியுள்ள நிலையில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

கே.சி.ஆர்.பேச்சு
தெலுங்கானாவில் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் இப்படியே தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொண்டு வந்தால், சாலை போக்குவரத்துக்கழகத்தை மூடுவதை தவிர வேறு வழியில்லை என்றும், அதனை யாராலும் பாதுகாக்க முடியாது எனவும் முதலமைச்சர் சந்திரசேகர்ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கவலை
தெலுங்கானாவில் ஹுசூர் நகர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி வெற்றிபெற்றதை அடுத்து அது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் மிகப்பெரிய அளவுக்கு இழப்பு ஏற்பட்டு அந்த நிறுவனமே திவாலை நோக்கி செல்வதாக கவலை தெரிவித்தார்.

மக்கள் அவதி
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் செய்து வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். போக்குவரத்து சேவை அடியோடு முடங்கியதால் மக்கள் மத்தியில் கடும் கோபம் ஏற்பட்டிருக்கிறது.

7,000 பேருந்துகள்
இந்நிலையில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் 7,000-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கி அதை இயக்குவது குறித்து யோசித்து வருகிறார் சந்திரசேகர் ராவ். இதன் மூலம் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதில்லை என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

தூண்டுதல்
தொழிற்சங்க நிர்வாகிகளை சில எதிர்க்கட்சித் தலைவர்கள் தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பதாகவும், அவர்களும் அந்தத் தலைவர்களின் பேச்சை கெட்டுக்கொண்டு அப்பாவி தொழிலாளர்களின் வாழ்வோடு விளையாடுவதாகவும் சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications