தேர்தல் எனில் தாகூர் போல தாடி... தமிழகம் எனில் லுங்கி... பிரதமர் மோடி மீது சந்திரசேகர ராவ் பாய்ச்சல்
ஹைதராபாத்: சட்டசபை தேர்தல் நடைபெற்றால் ரவீந்தரநாத் தாகூர் போல தாடி.. தமிழகத்துக்கு சென்றால் லுங்கி கட்டுவது என பிரதமர் மோடியின் உடைகளை முன்வைத்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடுமையாக சாடியுள்ளார்.
மத்திய அரசின் பட்ஜெட் குறித்து சந்திரசேகர ராவ் கூறியதாவது: பிரதமர் மோடி அணிகின்ற உடைகளும் மத்திய பட்ஜெட்டும் தோற்றத்தில் கவர்ச்சிகரமாகத்தான் இருக்கின்றன. ஆனால் சாரம்சம் என்று பார்த்தால் எதுவுமே இல்லையே..
தேர்தல் காலம் வந்துவிட்டால் ரவீந்தரநாத் தாகூர் போல தாடி வளர்க்கிறார் மோடி. தமிழகத்துக்கு போனால் லுங்கி அணிகிறார். என்னதான் நடக்கிறது? இத்தகைய கோமாளித்தனங்களால் என்னதான் இந்த தேசத்துக்கு கிடைத்துள்ளது?

எத்தனை தொப்பிகள்?
பஞ்சாப் சட்டசபை தேர்தல் என்றால் டர்பன் கட்டிக் கொள்கிறார். மணிப்பூருக்கு போனால் மணிப்பூர் தொப்பி... உத்தரகாண்ட் போனால் உத்தரகாண்ட் தொப்பி.. இதுமாதிரி எத்தனை தொப்பிகளைத்தான் போடுவாரோ மோடி? சமூக ஊடகங்களில் பாஜகவின் பி டீம் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி என அப்பட்டமான பொய்யைப் பரப்புகின்றனர்.

பாஜக பி டீமா?
பாஜகவின் பி டீம் நாங்கள் என்பது அப்பட்டமான பொய். இப்படியான பொய்களை திரும்ப திரும்ப பரப்பி மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கின்றனர். இப்போது இவை அனைத்துமே அம்பலமாகிவிட்டது. பாஜகவினர் வகுப்புவாத, பிரிவினைவாத அரசியலைக் கையிலெடுத்து விளையாடி வருகின்றனர். இது நீண்டகாலம் நிலைக்காது. இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறினார்.

மோடி எதிர்ப்புதான் கொள்கை
ஹைதராபாத்தில் ராமானுஜர் சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடியுடன் பங்கேற்கிறீர்களே? என்ற கேள்விக்கு, பிரதமர் மோடி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் எனில் மாநிலத்தின் முதல்வர் வரவேற்பது இயல்பானதுதான். இதை எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. பிரதமர் மோடியுடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என்பது அரசு முறையிலான நிகழ்வு. அதேநேரத்தில் பிரதமர் மோடியை விமர்சிப்பது என்பது என் கொள்கை. பிரதமர் மோடியுடன் ஹெலிகாப்டரில் ஒன்றாக பயணித்தாலும் கூட அப்போதும் அவரிடம் இதனையே நான் சொல்வேன். அப்படியெல்லாம் பின்வாங்கும் நபர் நானல்ல. என்றார்.

மாநில கட்சிகள் கூட்டணி
தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக மாநில கட்சிகளின் கூட்டணியை அமைப்பதில் தீவிரம் காட்டியவர் சந்திரசேகர ராவ். பின்னர் திடீரென அமைதியாக இருந்தார். அண்மையில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்தும் பேசியிருந்தார் சந்திரசேகர ராவ். இப்போது தாங்கள் பாஜகவின் பி டீம் அல்ல; பாஜகவை எதிர்க்கும் அணி என பட்டவர்த்தனமாக பேசியுள்ளார் சந்திரசேகர ராவ்.












Click it and Unblock the Notifications