தெலுங்கானா: வேட்பாளர் பட்டியலை வெளியிடும் கேசிஆர்.. அதிருப்தியாளர்கள் கட்சி தாவ ஜரூர்- பாஜக குஷி!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஆளும் பிஆர்எஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை முதல்வர் கே.சந்திரசேகர ராவ் அடுத்த வாரம் வெளியிட உள்ளார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டால் கட்சி தாவுவதற்கும் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் சிலர் தயாராக இருப்பதாக கூறப்படுவதால் தெலுங்கானா அரசியல் களம் பரபரக்கிறது.
தெலுங்கானா சட்டசபைக்கு இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேதான் போட்டி உள்ளது. ஆளும் பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி எப்படியாவது ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ், பாஜக உள்ளன. ஆனால் தெலுங்கானா மாநிலம் உருவான பின்னர் நடைபெற்ற 2 தேர்தல்களிலும் பிஆர்எஸ் கட்சி பெற்ற பிரம்மாண்ட வெற்றி காங்கிரஸ், பாஜகவின் முயற்சிகள் வீண் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் பிஆர்எஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை அடுத்த வாரம் முதல்வர் கேசிஆர் வெளியிட உள்ளார். தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏக்களில் 90% பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தர திட்டமிட்டுள்ளாராம் கேசிஆர். வேட்பாளர் பட்டியல் வெளியான உடனேயே கட்சி தாவல்கள் நடக்கும் என்பதை யூகித்துக் கொண்டுதான் கேசிஆர் முன்கூட்டியே இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறாராம்.
பிஆர்எஸ் கட்சி தலைமையுடன் மல்லுக்கட்டுகிற, தொகுதியில் கெட்ட பெயரை உருவாக்கி வைத்திருக்கிற 10 முதல் 20 எம்.எல்.ஏக்களுக்கு இந்த முறை சீட் மறுக்கப்பட இருக்கிறதாம். இதனை அரசல் புரசலாக புரிந்து கொண்ட சிட்டிங் எம்.எல்.ஏக்கள், வேட்பாளர்களைத் தேடும் நிலையில் இருக்கும் காங்கிரஸ், பாஜக பக்கம் தாவவும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனராம். இதில் பெரும்பாலானோர் பாஜக பக்கம் தாவ தூது அனுப்பி வருவதால் அக்கட்சி படுகுஷியில் இருக்கிறதாம். அதேநேரத்தில் இந்த அதிருப்தியாளர்களைத் தக்க வைக்க ஒரு குழுவை முதல்வர் கேசிஆர் அமைத்துள்ளாராம். அதிருப்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு நியமன பதவிகள் வழங்கப்படும் எனவும் உறுதி அளிக்க உள்ளதாம் பிஆர்எஸ். இதனால் தெலுங்கானா தேர்தல் களம் கன ஜோராக களைகட்டி வருகிறது.












Click it and Unblock the Notifications