டுன் டூன் ஆன்டி தெரியும்! யார் அந்த குமாரி ஆன்டி! முதல்வர் ரேவந்த் தலையிடும் அளவுக்கு என்ன நடந்தது?
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தில் குமாரி ஆன்டியின் சாலையோர உணவகத்தை மூட போலீஸார் உத்தரவிற்கு தடை விதித்தார் முதல்வர் ரேவந்த் ரெட்டி. விரைவில் அந்த கடைக்கு சாப்பிட செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் சாய் குமாரி. இவர் ஹைதராபாத்தில் ஐடிசி கோஹினூர் சர்கிள் பகுதியில் சாலையோர உணவு கடையை நடத்தி வருகிறார்.

இந்த கடையை அவர் 13 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார். இந்த கடையில் எப்போதும் கூட்டம் அலைமோதும். ஹைதராபாத்தில் பணியாற்றும் ஐடி ஊழியர்கள் உள்ளிட்டோர் இந்த கடையில்தான் குழுமியிருப்பார்கள்.
இதனால் இந்த கடையில் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. அந்த கடை இருக்கும் பகுதியில் மட்டும் வாகனங்கள் நீந்தி செல்லும் நிலை உள்ளது. குமாரி ஆன்டி கடைக்கு வரும் வாடிக்கையாளர்களும் வாகனங்களை வழியிலேயே நிறுத்திவிட்டு செல்கிறார்கள்.
இந்த கடை ஆரம்பத்தில் சாதாரண கடையை போல்தான் வியாபாரம் இருந்தது. ஆனால் இன்ஸ்டாகிராம் உணவு பிரியர் ஒருவர் இந்த கடையில் உணவு சாப்பிட்டுவிட்டு அதை வீடியோவாக தனது சேனலில் பதிவிட்டிருந்தார். அது முதல் அந்த கடையில் கூட்டம் அலைமோதுகிறது.
ஒரு சாலையோர உணவுக் கடையில் இட்லி, தோசை, பரோட்டா, சப்பாத்தி, பூரி, உப்புமா, சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி இவை மட்டும் இருப்பது சகஜம். ஆனால் ஒரு சாலையோர கடையில் எத்தனை வகையான உணவு என்பதை பார்த்து வியந்த மக்கள் இங்கு கூடுகிறார்கள். சிக்கன் வறுவல், சில்லி சிக்கன், ஈரல், மட்டன் தலைக்கறி, மட்டன் குடல் கறி, மீன் வறுவல், மீன் தலை குழம்பு, முட்டை, நெய் சோறு உள்ளிட்டவை கிடைக்கும்.
இது மட்டுமல்லாமல் 7 வகையான சைவ கலவை சாதங்களும் கிடைக்கும். ஹைதராபாத்திற்கு சென்றாலும் சரி இந்த ஹோட்டலில் மதிய உணவை சாப்பிடும் திட்டத்துடனே பலர் வருகை தருகிறார்கள். இந்த உணவகத்தில் உள்ள சாய் குமாரியை 2 கே கிட்ஸ் எல்லாம் குமாரி ஆன்டி என அழைக்க அந்த பெயரே சாலையோர உணவகத்திற்கு நிலைத்துவிட்டது.
இதையடுத்து யூடியூபர்கள், இன்ஸ்டா பிரபலங்கள், செய்தியாளர்கள் உள்ளிட்டோர் இந்த கடையில் வீடியோக்களை எடுத்துச் சென்றனர். இதனால் ஒரு நாளைக்கு அவருடைய கடைக்கு 500க்கு மேற்பட்டோர் வருகை தருகிறார்கள். இதனால் வாடிக்கையாளர்களுக்கு விரைவில் உணவை கொடுக்க ஆட்களை நியமித்தார்.
இந்த கடையில் மதிய உணவு மட்டும் ஒரு நாளைக்கு ரூ 40 ஆயிரத்திற்கு வியாபாரம் ஆகிறது. குமாரியின் கடைக்கு லம்போகினி காரில் கூட வந்து காத்திருந்து சாப்பிடுகிறார்கள். இந்த கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் தடுமாறினர். இதையடுத்து அடுத்த உத்தரவு வரும் வரை கடையை மூடி வைக்குமாறு உத்தரவிட்டனர்.
இதனால் சாய் குமாரி என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கினார். தான் எந்த தவறும் செய்யாத நிலையில் தனது கடையை ஏன் மூடினார்கள் என கேள்வி எழுப்பினார். இதையடுத்து இந்த விவகாரம் முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு சென்றது.
அவர் போக்குவரத்து துறை டிஜிபியிடம் பேசி அந்த கடையை மூடும் உத்தரவுக்கு தடை விதித்ததோடு வழக்கு பதிந்திருந்தால் அதை நீக்கி விடுங்கள் என்றும் கூறியிருந்தார். ரேவந்த் ரெட்டியும் குமாரி ஆன்டியின் கடைக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications