தெலுங்கானா: கிரிமினல் கேஸ்களில் காங். முன்னணி! கோடிகளை குவித்த கோடீஸ்வரர்களாக பிஆர்எஸ் வேட்பாளர்கள்!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான இறுதி கட்ட பிரசாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. தெலுங்கானாவில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிகமான எண்ணிக்கையில் கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளதாக வேட்பு மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானா சட்டசபை தேர்தல் வரும் 30-ந் தேதி நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சி 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. தெலுங்கானவில் டபுள் டிஜி இடங்களை பிடித்துவிடமாட்டோமோ என்ற பரிதவிப்பில் பாஜக உள்ளது. தற்போது தெலுங்கானாவில் இறுதி கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது.
தெலுங்கானா சட்டசபை தேர்தலில் மொத்தம் 2,290 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 355 பேர் தேசிய கட்சிகளின் வேட்பாளர்கள்; 175 பேர் மாநில கட்சிகளின் வேட்பாளர்கள். 771 பேர் பதிவு செய்யப்பட அங்கீகாரம் பெறாத கட்சிகளின் வேட்பாளர்கள். 989 பேர் சுயேட்சைகள்.
கிரிமினல் வழக்குகள்: காங்கிரஸ் கட்சியின் 118 வேட்பாளர்களில் 60 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன; பாஜக கூட்டணியின் 34 வேட்பாளர்கள் மீது கிரிமினல் கேஸ்கள் உள்ளன. 45 வேட்பாளர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிலுவையில் உள்ளன. 45 வேட்பாளர்கள் மீது பலாத்கார வழக்குகள் உள்ளன. 7 வேட்பாளர்கள் மீது கொலை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. பிஆர்எஸ் கட்சியில் 57 வேட்பாளர்கள் மீது கிரிமினல் கேஸ்கள் உள்ளன.
கோடீஸ்வரர்கள்: பிஆர்எஸ் கட்சியில் 119 வேட்பாளர்களில் 118 பேரும், காங்கிரஸ் கட்சியில் 111 வேட்பாளர்களும் பாஜகவில் 93 வேட்பாளர்களும் ரூ1 கோடிக்கும் அதிகமான சொத்துகள் உள்ளதாக வேட்புமனுக்களில் தெரிவித்துள்ளனர். மிக அதிகமாக சொத்து குவித்த டாப் 3 வேட்பாளர்கள் மூன்று பேருமே காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். காங்கிரஸ் வேட்பாளர் கட்டம் விவேகானந்த் தமக்கு ரூ606 கோடி சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். கோமதிரெட்டி ராஜ் கோபால் ரெட்டி தமக்கு ரூ458 கோடி சொத்தும் ஶ்ரீனிவாஸ் ரெட்டி தமக்கு ரூ433 கோடி சொத்தும் இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications