தெலங்கானாவில் பாஜக ஜெயித்தால்.. மக்கள் சொர்க்கத்திற்கு போவார்கள்.. ப.சிதம்பரம் மாஸ் கலாய்!
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு தொடர்புடைய இடங்களில் மத்திய விசாரணை அமைப்புகள் ரெய்டு நடத்தியிருப்பதாகவும், ஆனால் பாஜக வேட்பாளர்களுக்கு சொந்தமான இடங்களில் இப்படி ஏன் ரெய்டு நடத்தப்படவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.
தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இங்கு பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. தேர்தலையொட்டி இக்கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக போராடி வருகிறது. ஆனால் காங்கிரஸ் பயங்கர டஃப் கொடுத்து வருகிறது. எனவே இரு கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. இப்படி இருக்கையில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தொடர்புடைய இடங்களில் மத்திய விசாரணை அமைப்புகள் ரெய்டு நடத்தியிருப்பது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் சென்னூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கியுள்ள விவேக் வெங்கட்சாமிக்கு தொடர்புடைய இடங்களில் மத்திய விசாரணை அமைப்புகள் சமீபத்தில் திடீர் ரெய்டை மேற்கொண்டன. இவர் கடந்த 1ம் தேதிதான் பாஜகவிலிருந்து பிரிந்து காங்கிரஸில் வந்து இணைந்தார். காங்கிரஸ் சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களில் இவர் மிகவும் பணக்காரராவார். இப்படி இருக்கையில் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் இவருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே இதுபோன்று மூன்று காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு சொந்தமான இடங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டது. அவர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சம்மனும் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மத்திய விசாரணை அமைப்புகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
அதாவது "தெலங்கானாவில் குறைந்தது 4 காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. அவர்கள் தொடர்புடைய இடங்களில் விசாரணை அமைப்புகள் ரெய்டு மேற்கொண்டிருக்கின்றன. இந்த நான்கு பேரில் ஒருவர் கடந்த 1ம் தேதிதான் பாஜகவிலிருந்து காங்கிரஸில் இணைந்தார். எனக்கு தெரிந்து பாஜகவின் எந்த வேட்பாளரும் விசாரணை அமைப்புகளால் தேடப்படவில்லை.
ஏனெனில் அவர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள். உண்மையில், பாஜக தேர்ந்தெடுக்கப்பட்டால், அக்கட்சி தெலங்கானா மக்களை நேராக சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்.
மத்திய விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் எந்த வாதமும் தேவையில்லை" என்று x சோஷியல் மீடியா தளத்தில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications