தெலுங்கானா:காங்கிரஸ் கூட்டணி உடைந்தது! சிபிஎம் தனித்து போட்டி- சிபிஐ ‘வெயிட்டிங்’-ஆட்சி கனவு அதோகதி?
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி உடைந்துள்ளது. தெலுங்கானாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தனித்துப் போட்டியிடுவதாக வேட்பாளர்களையும் அறிவித்தது.
தெலுங்கானா சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ந் தேதி நடைபெற உள்ளது. தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களைக் கைப்பற்றும் அல்லது ஆட்சியை பிடிக்கும் என சில தேர்தல் கருத்து கணிப்புகள் தெரிவித்திருந்தன. தெலுங்கானா களநிலவரமும் காங்கிரஸுக்கு சாதகமாக இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர். இதனால் பிஆர்எஸ், பாஜக கட்சிகளில் அதிருப்தியில் இருந்த தலைவர்கள் பலரும் காங்கிரஸில் சாரை சாரையாக இணைந்தனர்.

இந்த நிலையில் காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி அமைத்து தெலுங்கானாவில் தேர்தலை சந்திக்க முடிவு செய்தன. இது தொடர்பாக பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டணியில் ஒருமித்த முடிவு எட்டப்படவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்ட தொகுதிகளை காங்கிரஸ் கட்சி ஒதுக்க மறுத்து வந்தது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CP(I)M ) காங்கிரஸுக்கு கெடுவும் விதித்தது. ஆனால் காங்கிரஸ் கண்டுகொள்ளாமலே இருந்தது.
இதனையடுத்து சிபிஎம் கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்து 17 வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டது. அதே நேரத்தில் மற்றொரு இடதுசாரி கட்சியான சிபிஐ (CPI இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), இன்னும் சற்று பொறுத்திருக்கலாம் என முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மூத்த சிபிஎம் தலைவர் கூறுகையில், எங்களுக்கு இப்போதைக்கு வேறுவாய்ப்பே இல்லை. ஆகையால் தனித்துப் போட்டியிட முடிவு செய்தோம். 24 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்க திட்டமிட்டோம். ஆனால் தற்போது சிபிஎம் மேலிடம் 17 வேட்பாளர்களை மட்டும் அறிவிக்க ஒப்புதல் கொடுத்துள்ளது. ஆகையால் 17 வேட்பாளர்களை அறிவித்திருக்கிறோம் என்றார்.
சிபிஎம் கட்சியின் நிலைப்பாடும் இறுதியான பின்னர் சில தொகுதிகளில் மாற்றங்கள் இருக்கக் கூடும்; தற்போதைய நிலையில் சிபிஎம் கட்சி அதிகபட்சமாக 20 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட வாய்ப்பிருக்கிறது. எஞ்சிய தொகுதிகளில் பாஜகவுக்கு எதிராக போட்டியிட்டு வெல்லும் வாய்ப்புள்ள பிஆர்எஸ் அல்லது காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்க சிபிஎம் வேண்டுகோள் விடுக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
தெலுங்கானாவில் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் பிஆர்எஸ், காங்கிரஸ், இடதுசாரிகள் என தனித்தனியே சிதறுகிறது. இதனால் காங்கிரஸின் ஆட்சி அமைப்போம் கனவு சிதைந்து போகும் நிலைமையும் உருவாகி இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications