ஆந்திராவை தொடர்ந்து.. தெலங்கானாவிலும் தொழிலாளர் வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்வு!
ஹைதராபாத்: ஆந்திராவை தொடர்ந்து தற்போது தெலங்கானாவிலும் வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதற்காக தொழிலாளர் சட்ட விதிமுறைகளில் மாற்றத்தை தெலங்கானா அரசு கொண்டு வந்திருக்கிறது.
வணிக நிறுவனங்கள் தற்போது 8 மணி நேரம் வேலை என்பதை 10 மணி நேரமாக அதிகரித்துக் கொள்ளலாம். ஆனால், வாரத்தில் 48 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும். கூடுதல் நேரத்திற்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும் சட்டத் திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக அம்மாநில தொழிலாளர் துறை முதன்மைச் செயலாளர் எம். தன கிஷோர் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "தினசரி வேலை நேரம் 8 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக உயர்த்தப்படுகிறது. ஜூலை .8ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. ஆனால் வாரத்திற்கு 48 மணி நேரம் மட்டுமே வேலை இருக்க வேண்டும்.
ஊழியர்கள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், வாரத்தின் பிற்பகுதியில் வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும். இந்த வரம்பை மீறி வேலை செய்தால், அவர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசின் 'தொழில் செய்வதை எளிதாக்கும்' முயற்சிக்கு தெலங்கானா அரசு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக இந்த உத்தரவு பார்க்கப்படுகிறது. எந்தவொரு ஊழியரும் 30 நிமிட ஓய்வு இடைவேளை இல்லாமல் ஆறு மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து வேலை செய்யக்கூடாது என்று அரசு கட்டாயமாக்கியுள்ளது. மேலும், இடைவேளைகள் உட்பட, ஒரு நாளில் வேலையின் மொத்த நேரம் 12 மணி நேரத்தை தாண்டக்கூடாது.
மேலும், ஊழியர்களை வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய சொல்லலாம். ஆனால், அதற்கு கூடுதல் ஊதியம் வழங்கப்பட வேண்டும். அதுவும் ஒரு காலாண்டில் அதிகபட்சமாக 144 மணி நேரம் மட்டுமே இருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளை மீறினால், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அந்த நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரசாணை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக தெலங்கானா மாநிலத்தின் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், "தொழிற்சாலை ஊழியர்களுக்கும் இதேபோன்ற நீட்டிப்பை அரசு பரிசீலித்து வருகிறது. தொழில் செய்வதை எளிதாக்குவதற்கு மத்திய அரசு ஒரு வழிகாட்டுதலை வழங்கியிருக்கிறது. அதை பின்பற்றி பல மாநிலங்கள் மாற்றங்களைச் செய்து வருகின்றன.
இந்த மாற்றங்களுக்கு தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மறுபுறம் தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் கடும் எதிர்ப்பை தெரிவிதிருக்கின்றன. ஏற்கெனவே 8 மணி நேர வேலையை 10 மணி நேரமாக நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் மாற்றியிருக்கின்றன. இப்படி இருக்கையில் 10 மணி நேரம் என வேலை நேரத்தை மாற்றினால், அது 12 மணி நேரமாக யதார்த்தத்தில் பிரதிபலிக்கும். எனவே இந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.












Click it and Unblock the Notifications