மத்திய அரசை மீறி தெலுங்கானாவில் இரவில் பறந்த ஆர்டர்.. பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீடு 10%ஆக உயர்வு
ஹைதராபாத்: மத்திய அரசு அனுமதி வழங்காத நிலையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பட்டியலின பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீட்டை 6 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தி தெலுங்கானா அரசு இரவோடு இரவாக அரசாணை பிறப்பித்தது.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா கடந்த 2014ல் தனி மாநிலமாக பிரிந்தது. இதையடுத்து நடந்த 2 சட்டசபை தேர்தலிலும் சந்திர சேகரராவின் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி வெற்றி பெற்றுள்ளது.
முதல்வராக சந்திர சேகரராவ் தொடர்ந்து வருகிறார். இவரது ஆட்சியில் மாநிலத்தில் இடஒதுக்கீட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
அடுத்த அதிர்ச்சி.. சென்னை உள்பட 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் கட்டணம் உயர்வு.. காரணத்தை பாருங்க
இடஒதுக்கீடு அதிகரிக்க மசோதா
அதன்படி 2017ல் தெலுங்கானா சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தொடரில் எஸ்டி பிரிவினருக்கு 10 சதவீதம் வரையும், முஸ்லிம்களுக்கு (பிசி-இ) 12 சதவீதம் வரை இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இதன்மூலம் மாநில அரசின் இடஒதுக்கீட்டை 62 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டது. மேலும் இந்த மசோதாவில் தமிழகத்தில் மொத்த இடஒதுக்கீடு 69 சதவீதமாக இருப்பதும் சுட்டி காட்டப்பட்டு இருந்தது.
கிடப்பில் மசோதா
இதையடுத்து முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை மத்திய அரசு ஏற்கவில்லை. பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டுக்கு தொடர்பான அம்சம் கிடப்பில் போடப்பட்டது. ஐந்தரை ஆண்டுகள் ஆகியும் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் எதிர்க்கட்சிகள் மற்றும் பழங்குடியின ஆர்வலர்கள் பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்துவதில் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை. இதனை மாநில அரசே செய்யலாம் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
சந்திர சேகரராவ் அறிவிப்பு
தெலுங்கானாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீட்டை 6 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக அதிகரிக்கலாம் என்ற தகவல் இருந்தது. இதற்கிடையே தான் கடந்த 17 ம் தேதி தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை மாநில அரசே அதிகரிக்க முடிவு செய்துள்ளது என்று கூறினார்.
10 சதவீதமாக உயர்த்தி அரசாணை
அதன்படி நேற்று நள்ளிரவு அரசாணை வெளியிடப்பட்டது. அதில் மாநிலத்தில் பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீடு 6 சதவீதமாக உள்ளது. இதனை 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது எனவும், இதன்மூலம் மாநிலத்தின் மொத்த இடஒதுக்கீடு 54 சதவீதமாக உயர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவுக்கு பழங்குடியின மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.