தெலுங்கானாவில் சூறாவளியாக நிர்மலா சீதாராமன்..தமிழகத்தில் கிடைக்காமல் போனதை எட்டிப் பிடிக்க ஸ்கெட்ச்?
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறக் கூடும் என தகவல்கள் வெளியான சூட்டோடு, அம்மாநிலத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பயணம் பெரும் பரபரப்பை கிளப்பி தலைப்புச் செய்திகளாகிக் கொண்டிருக்கின்றன.
தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்து ஒருங்கிணைந்த ஆந்திராவின் மருமகளாகி மத்திய அமைச்சராகி இருப்பவர் நிர்மலா சீதாராமன். இப்போது கர்நாடகாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கானாவைப் பொறுத்தவரையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி- டிஆர்எஸ் கட்சியை வீழ்த்த வலிமையான எதிர்க்கட்சி எதுவும் இல்லை என்பதுதான் நிதர்சனம். தெலுங்கானா சட்டசபை எதிர்கொள்ளப் போகும் 3-வது தேர்தல். முதல்வர் கேசிஆரின் டிஆர்எஸ் கட்சிக்கு எதிரான ஒரு கட்சி என்றால் காங்கிரஸ்தான். ஆனால் காங்கிரஸ் தலைவர்களை கொத்து கொத்தாக பாஜக விழுங்கிக் கொண்டிருக்கிறது.

பாஜக நம்பிக்கை
இதனால் ஆளும் டிஆர்எஸ்-க்கு எதிரான இயல்பான அதிருப்தி அலையை அறுவடை செய்வதில் பாஜக பிடிவாதமாக இருக்கிறது. மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து தெலுங்கானாவில் முகாமிட்டு வருகின்றனர். தெலுங்கானாவில் எப்படியும் ஆட்சியை பிடித்துவிட முடியும் என்கிற பெருநம்பிக்கையில் இருக்கிறது பாஜக.

பந்தி சஞ்சய்குமார்
இதனால்தான் என்னவோ, தெலுங்கானா பாஜகவில் யார் அடுத்த முதல்வர் என்கிற தன்முனைப்பும் கொடிகட்டிப் பறக்கிறது. தெலுங்கானா பாஜக தலைவர் Bandi Sanjay Kumar - பந்தி சஞ்சய்குமார், தாமே அடுத்த முதல்வர் என்ற இலக்குடன் பாதயாத்திரை நடத்தி நெருப்பை பற்ற வைத்துக் கொண்டிருக்கிறார். இவர் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்து பாஜகவுக்கு வந்தவர். அதனால் அடிமட்ட அளவில் செல்வாக்கை விரிவாக்குவது எப்படி என்கிற வித்தையிலும் தேர்ந்தவர்.

கிஷண் ரெட்டி
பந்தி சஞ்சய்குமாருக்கு போட்டியாக முதல்வர் வேட்பாளர் கனவில் இருப்பவர் பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான கிஷண் ரெட்டி. முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் லாபி இவருக்கு கை கொடுக்கலாம் என நம்புகிறார். சீனியர் என்ற அடிப்படையில் கர்நாடகாவில் எடியூரப்பாவுக்கு வாய்ப்பு கொடுத்தது போல தமக்கும் சான்ஸ் காத்திருக்கலாம் என்பது கிஷண் ரெட்டி தரப்பின் எதிர்பார்ப்பு.

எட்டலா ராஜேந்தர்
பந்தி சஞ்சய்குமார், கிஷன் ரெட்டி இருவருக்கும் போட்டியாக இருப்பவர் எட்டலா ராஜேந்தர். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் சீனியராக இருந்தவர். 6 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். அத்தனையையும் தூக்கி எறிந்துவிட்டு பாஜகவில் இணைந்தவர். இவரும் முதல்வர் வேட்பாளர் கனவில் வலம் வருகிறார்.

நிர்மலா சீதாராமன்?
இந்த நிலையில் தெலுங்கானா தேர்தலை முன்வைத்து மத்திய அமைச்சர்களை பாஜக மேலிடம் களமிறக்கி இருக்கிறது. தெலுங்கானாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பயணம் பெரும் சர்ச்சையாகவும் ஆகி உள்ளது. நிர்மலா சீதாராமனுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் ஒரு பக்கம்...எங்கப்பா பிரதமர் மோடி என ரேஷனில் ரெய்டு என இன்னொருபக்கம் என தலைப்புச் செய்திகளில் அடிபடுகிறார் நிர்மலா சீதாராமன். ஏற்கனவே தமிழகத்தில் பத்தாண்டுகளாக பாஜகவின் முதல்வர் வேட்பாளர் நிர்மலா சீதாராமன் என்கிற பேச்சு இருந்து வருகிறது. ஆனால் அப்படியான ஒன்று இதுவரை நடக்கவும் இல்லை.. அதற்கான சாத்தியங்களும் கண்ணுக்கு எட்டிய தொலைவிலும் இல்லை. ஒருவேளை பிறந்த வீடான தமிழகத்தில் அப்படி நிகழாத ஒன்று புகுந்த வீடான ஆந்திராவின் இன்னொரு பகுதியான தெலுங்கானாவில் நிகழ்வதற்கான சாத்தியங்களைத்தான் இந்த பரபர விசிட் களேபரங்கள் வெளிப்படுத்துகின்றனவோ என்னவோ? என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications