4 பேரையும் நடுரோட்டில் நிக்க வச்சு அப்படியே உயிரோடு எரிக்கணும்.. பெண் மருத்துவரின் தாய் கண்ணீர்
ஹைதராபாத்: என் பெண்ணை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த கயவர்களை பொது இடத்தில் வைத்து உயிருடன் எரிக்க வேண்டும் என கொல்லப்பட்ட கால்நடை மருத்துவரின் தாய் ஆவேசமாக தெரிவித்தார்.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் 26 வயது பெண்ணான இவர் கொல்லத்தில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தார்.
இவர் தினந்தோறும் தொண்டபள்ளி டோல்கேட் அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து பேருந்தில் கொல்லத்திற்கு செல்வது வழக்கம்.
வாகனம்
அது போல் கடந்த செவ்வாய்க்கிழமை பெண் மருத்துவர் கொல்லத்துக்கு சென்றுவிட்டு வாகனத்தை எடுக்க டோல்கேட் வந்துள்ளார். அங்கு அவரது வாகனம் பஞ்சராகிவிட்டது. உடனே வாகனத்தை தள்ளிக் கொண்டு செல்ல முற்பட்ட போது லாரி டிரைவர் முகமது பாஷா அந்த பெண்ணிடம் பேச்சுக் கொடுத்து வாகனத்தை பஞ்சர் போட்டு விட்டு வருவதாக கூறி எடுத்துச் சென்றார்.
சைகை மூலம் பேசிய கயவர்கள்
அப்போது தனியாக ஒரு இடத்தில் நின்றிருந்த பெண்ணை பார்த்து அங்கு மதுபோதையில் இருந்த 3 பேர் கைகளை காட்டி ஏதோ பேசியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த பிரியங்கா தனது தங்கைக்கு போன் செய்து அங்கு நிகழ்ந்த அசாதாரண சூழல்கள் குறித்து கூறினார். அப்போது அந்த மூவரும் உஷாராகி, பெண்ணின் வாயை பொத்தி மறைவான இடத்துக்கு தூக்கி சென்றனர்.
எரிந்த உடல்
அங்கு மூவரும் கூட்டு பலாத்காரம் செய்தனர். பின்னர் வாகனத்துடன் வந்த முகமது பாஷாவும் பலாத்காரம் செய்தார். இதையடுத்து அந்த பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்த 4 பேரும் அவரது உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.
உயிருடன் எரித்து கொலை
இதையடுத்து முகமது பாஷா உள்பட 4 பேரை ஹைதராபாத் போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பெண் மருத்துவரின் தாய் கூறுகையில் எனது மகள் அப்பாவி. எனது மகளை கொடூரமாக கொன்ற 4 பேரையும் பொது வெளியில் நிற்க வைத்து உயிருடன் எரிக்க வேண்டும் என கதறியவாறு கூறினார்.