நாகப்பாம்புடன் லிப் லாக் ரீல்ஸ்.. ஒரேபோடு போட்டதில்.. உயிரை இழந்த தெலங்கானா இளைஞர்
ஹைதராபாத்: நாகப்பாம்பின் வாயோடு வாய் வைத்து ரீல்ஸ் எடுத்து கெத்து காட்டிய நபரின் நாக்கில் பாம்பு ஒரே போடாக போட்டதில் சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் முகம் தெரியாத நபர்களின் லைக்ஸ் மற்றும் கமெண்ட்டுகளை குவிப்பதற்காக டிசைன் டிசைனான ரீல்ஸ் போடுவதை பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஒரு சில சமயங்களில் இந்த வீடியோக்கள் மூலம் சிலர் பிரபலமாவதும் உண்டு. சிலர் சர்ச்சைகளில் சிக்குவதும் உண்டு. இதில் சிலர் வித்தியாசமான ஸ்டண்டுகளை செய்து லைக்குகளை குவிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு ஆபத்தான விஷயங்களையும் மேற்கொள்கின்றனர்.

இதுபோன்ற செயல்களால் சில சமயங்களில் உயிரை இழக்கும் சம்பங்களும் நிகழ்கின்றன. அந்த வகையில், தெலங்கான மாநிலத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 6 அடி நீள நாகம்பாம்பை பிடித்து வாய்க்குள் வைத்து ரீல்ஸ் செய்த இளைஞர் பாம்பு தீண்டியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், காமரெட்டி மாவட்டம், பான்ஸ்வாடா மண்டலத்தில் உள்ள தேசாய்பேட் கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காராம். இவரது மகன் சிவ ராஜுலு (23 வயது). கங்காராம் தொழில் முறை பாம்புபிடி வீரர். சிவராஜுலுவும் தனது தந்தையிடம் பாம்புகளைக் கையாளுவது குறித்து கற்று தேர்ந்துள்ளார்.
இந்நிலையில், காலனி பகுதியில் 6 அடி நீள அளவிலான நாகப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதையடுத்து, அந்த நாகப்பாம்பை பிடித்துள்ளார் கங்காராம். இதையடுத்து, அந்த நாகப்பாம்பை தனது மகனிடம் கொடுத்து ரீல்ஸ் எடுத்துள்ளார் கங்காராம். இந்நிலையில், கங்காராமின் வேண்டுகோளின்படி தனது வாய்க்குள் பாம்பை புகுத்தி போஸ் கொடுத்துள்ளார் சிவராஜுலு. அப்போது, அவரது நாக்கில் பாம்பு கடித்துள்ளது.
இதனை உணராமல் சிவராஜுலு நேராகவும், தைரியமாகவும் சில நிமிடங்கள் நின்று வணக்கம் கூறுவதுபோல போஸ் கொடுத்தார். பின்னர், தனது தலைமுடியைக் கூட ஸ்டைலாக சரிசெய்தார். தொடர்ந்து, தம்ஸ்அப் காட்டிவிட்டு வணக்கம் செலுத்துகிறார். இந்த நிலையில் திடீரென மயங்கி கீழே விழுந்தார் அந்த இளைஞர். இதையடுத்து, சிவராஜுலுவை பாம்பு கடித்ததை உணர்ந்த அவரது தந்தை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, சிவராஜுலுவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பான்ஸ்வாடா பகுதியில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ரீல்ஸ் மோகத்தால் தந்தையின் கண்முன்னே இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொழில் முறை பாம்புபிடி வீரர்களே சமயத்தில் உயிரிழக்கும் நிலையில், முறையான வழிகாட்டுதல்களோ, அனுபவமோ இல்லாதவர்கள் பாம்புகளைக் கையாளக் கூடாது என்று தொடர்ந்து வனத் துறை அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர். இருப்பினும் சோஷியல் மீடியாவில் பிரபலமடைவதற்காக இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடுவது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த செயலை நெட்டிசன்கள் பலரும் கண்டித்து கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications