அதிக பக்தர்கள் வருகை.. இந்தியாவில் திருப்பதிக்கு 2ம் இடம்.. முதல் இடத்தில் எந்த கோவில் பாருங்க!
ஹைதராபாத்: இந்தியாவில் உள்ள கோவில்களுக்கு உள்நாட்டு பக்தர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தான் 2022ல் இந்தியாவில் அதிக பக்தர்கள் சென்ற கோவில்களின் பட்டியலில் திருப்பதி 2வது இடத்தில் உள்ள நிலையில் முதலிடத்தில் இன்னொரு கோவில் உள்ளது. மேலும் ஆன்மிக நகரம் என பெயர் பெற்றுள்ள மதுரையில் புதிய சாதனையை செய்துள்ளது.
இந்தியாவில் ஏராளமான கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு கோவில்களுக்கும் அந்தந்த மாநில மக்கள் தவிர பிற மாநில மக்களும், வெளிநாட்டு மக்களும் அதிகமாக வந்து செல்கின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பல கட்டுப்பாடுகள் இருந்தன. இந்நிலையில் தான் 2022ல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டன.
கோவில்களில் ஆய்வு
இதன் தொடர்ச்சியாக பலரும் கோவில்களுக்கு சென்று வருகின்றனர். எந்த வித கட்டுப்பாடுகளும் இன்றி பக்தர்கள் கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் இந்தியாவில் உள்ள கோவில்கள் தொடர்பான ஆய்வை ‛ஓயோ' (OYO)எனும் நிறுவனம் சார்பில் ஆன்மிக கலாச்சார பயணங்கள் என்ற பெயரில் ஆய்வு நடத்தப்பட்டது.
2வது இடத்தில் திருப்பதி
2022ம் ஆண்டுக்கான இந்த ஆய்வின் மூலம் இந்தியாவில் அதிகமான பக்தர்கள் சென்ற கோவில்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஓட்டல்களில் பக்தர்கள் எடுத்த தங்கும் அறைகளின் முன்பதிவு மற்றும் நேரடி ஆய்வின் அடிப்படையில் இந்த பணி நடத்தப்பட்டது. அதன்படி இந்தியாவில் அதிக பக்தர்கள் வந்து செல்லும் பக்தர்களின் பட்டியலில் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா கோவில் 2வது இடத்தில் உள்ளது.
பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
மேலும் கடந்த 1950ல் முதல் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்கு தினமும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பக்தர்கள் வந்த நிலையில் தற்போது 80 ஆயிரம் முதல் ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது. பலருக்கு இது குலதெய்வமாக உள்ள நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும் கடந்த ஆண்டை விட தற்போது பக்தர்களின் டிக்கெட் முன்பதிவு என்பது 238 சதவீதம் வரை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
முதலிடத்தில் எந்த கோவில்
இந்த பட்டியலில் முதலிடத்தில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த பட்டியலின் 3வது இடத்தில் ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகன்நாதர் கோவிலும், 4வது இடத்தில் பஞ்சாப்பில் அமைந்து இருக்கும் அமிர்தசரஸ் பொற்கோவிலும், 5வது இடத்தில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் கோவிலும் இடம்பெற்றிருப்பதாக அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆன்மிக நகரங்கள்..
மேலும் தற்போதைய சூழலில் மகாராஷ்டிரா சீரடி, உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ், உத்தர பிரதேச மாநிலம் மதுரா, மகாராஷ்டிராவின் மகாபலேஸ்வர், தமிழ்நாட்டின் மதுரை உள்ளிட்ட ஆன்மிக நகரங்கள் மிக வேகமாக வளர்ந்து வரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.