"மனைவியை கூட்டிட்டு வா.. எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்".. 4 பேர் தற்கொலையில் எம்எல்ஏ மகன் கைது
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் வெளியான வீடியோவில் எம்எல்ஏ மகன் வனமா ராகவேந்திரா ராவ்தான் காரணம் என கூறியுள்ளனர். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். தொழிலதிபரின் பிரச்சினையை தீர்த்து வைக்க மனைவியை அழைத்து கொண்டு வருமாறு எம்எல்ஏ மகன் பேசியதாக அந்த வீடியோவில் கூறப்படுகிறது.
தெலுங்கானாவில் பழைய பலோஞ்சாவை சேர்ந்தவர் மண்டிகா நாகா ராமகிருஷ்ணா. அவரது மனைவி ஸ்ரீலட்சுமி. அவர்களது மகள்கள் சாஹித்யா மற்றும் சாஹிதி. கடந்த 2ஆம்தேதி ராமகிருஷ்ணா, தனது மனைவி, மகள்களுடன் அவரது வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதில் ராமகிருஷ்ணா, ஸ்ரீலட்சுமி, சாஹித்யா ஆகியோர் வீட்டிலேயே இறந்துவிட்டனர். மற்றொரு மகள் சாஹிதி 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்காக போராடி வருகிறார்.

தொழிலதிபர் வீடியோ
இந்த நிலையில் ராமகிருஷ்ணன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் அவர் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: எனது வீட்டில் இருந்து எனக்கு வர வேண்டிய சொத்துகளை மீட்டுத் தர வேண்டும் என கோதகுடமின் தொகுதி எம்எல்ஏ மகன் வனமா ராகவேந்திரா ராவிடம் சென்றோம்.

எம்எல்ஏ மகன் மிரட்டல்
அவர் உன்னுடைய பிரச்சினைகளை சரி செய்கிறேன். ஆனால் உனது மனைவியை அழைத்துக் கொண்டு ஹைதராபாத்திற்கு வர வேண்டும் என்றாராம். மேலும் எம்எல்ஏ மகன், என்னை தவிர உனது பிரச்சினைகளுக்கு யாராலும் உதவ முடியாது என்றாராம். உன்னால் உன் சொத்துகளை திரும்ப வாங்கவே முடியாது என்றாராம்.

எம்எல்ஏ மகன்
எங்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகின்றன. நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அவளை (மனைவியை) பாதுகாப்பது எனது கடமை. என்னால் எனது மனைவியை எம்எல்ஏ மகன் சொல்வது போல் அனுப்ப முடியாது. இதனால்தான் நான் இந்த முடிவை எடுத்தேன். நான் ஏதோ பொய் கூறுவதாக மக்கள் நினைக்க வேண்டாம். திரைமறைவில் நடக்கும் விஷயங்களை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியாது என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

வீடியோ ஆதாரம்
இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து போலீஸார் கோதகுடம் எம்எல்ஏ மகன் வனமா ராகவேந்திர ராவ் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவரும் கோதகுடம் எம்எல்ஏவுமான வனமா வெங்கடேஸ்வர ராவ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்து ஒருவாரமாரியும் எம்எல்ஏ மகன் கைது செய்யப்படவில்லை.

எம்எல்ஏ மகன் கைது
இதனால் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால் இந்த விவகாரத்தில் தனது மகன் ஒரு அப்பாவி என எம்எல்ஏ வனமா வெங்கடேஸ்வர ராவ் அறிக்கை விடுத்துள்ளார். எம்எல்ஏ மகனால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டுள்ளது இன்னும் அவரை கைது செய்யாதது ஏன் என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில் எம்எல்ஏ மகன் வனமா வெங்கடேஸ்வர ராவ் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications