தெலங்கானாவிலும் வெடிக்கிறது இந்தி எதிர்ப்பு.. "வீறுகொண்டு எதிர்ப்போம்".. கே.டி. ராமாராவ் ஆவேசம்
ஹைதராபாத்: உயர்கல்வி நிலையங்களில் இந்தியை பயிற்று மொழியாக மாற்ற வேண்டும் என்ற நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைக்கு எதிராக தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சியின் செயல்தலைவரும், அமைச்சருமான கே.டி. ராமாராவ் குரல் கொடுத்துள்ளார்.
எந்தவொரு சூழ்நிலையிலும் இந்தி திணிப்பை நாங்கள் வீறுகொண்டு எதிர்ப்போம் எனவும் அவர் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
கே.டி. ராமாராவின் இந்தப் பேச்சால் இனி தெலங்கானாவிலும் இந்தி திணிப்பு அரசியலுக்கு எதிரான குரல் ஓங்கி ஒலிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியும், எதிர்ப்பும்...
மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றது முதலாகவே, இந்தி மொழியை பிரதானப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது அதிகரித்துள்ளது. தேசியக் கல்விக் கொள்கையிலும் இந்தி மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் இந்தி பேசாத மற்ற மாநிலங்களில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியை முதன்மைப்படுத்துவதன் மூலமாக பிராந்திய மொழிகளை அழிக்க பாஜக திட்டமிடுவதாக அவை குற்றம்சாட்டி வருகின்றன.

எரிகிற நெருப்பில் எண்ணெய்..
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக்குழு தனது 11-வது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் அண்மையில் அளித்தது. அதில், எல்லா மாநிலங்களில் ஆங்கிலத்தை விட பிராந்திய மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. மேலும், இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் (Central Universities) உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. அதே சமயத்தில், ஆங்கிலத்தை புறக்கணிக்கும் அம்சங்களும் அதில் இடம்பெற்றிருக்கின்றன.

'மொழிப்போரை திணிக்க வேண்டாம்'
இக்குழுவின் இந்த பரிந்துரைக்கு தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. தமிழகத்தில் திமுக, மநீம, பாமக போன்ற கட்சிகளும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. இதுகுறித்து அண்மையில் கருத்து தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து, இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம்" என்று காட்டமாக கூறியிருந்தார்.

கே.டி. ராமாராவ் எதிர்ப்பு
இந்த சூழலில், தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சியின் செயல்தலைவரான கே.டி. ராமாராவும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் இன்று கருத்து பதிவிட்டுள்ளார். அதில், "இந்தி என்பது இந்தியாவின் தேசிய மொழி அல்ல. மற்ற அலுவல் மொழிகளை போல அதுவும் ஒரு அலுவல் மொழி. அவ்வளவுதான். ஐஐடி மற்றும் அரசுத் துறைகளில் பணிக்கு ஆட்கள் எடுப்பதில் இந்தியை கட்டாயமாக்குவதன் மூலம் அதை திணிக்க மத்திய அரசு முயல்கிறது. இந்தியர்கள் அனைவருக்கும் தங்கள் மொழியை தேர்ந்தெடுக்க உரிமை உள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் அதை மீறும் வகையில் உள்ளது. மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கையை வீறுகொண்டு எதிர்ப்போம்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications