அமித் ஷா செருப்பை எடுக்க ஓடிய பாஜக தலைவர்.. ஹைதராபாத்தில் "பெரிய சர்ச்சை".. விளாசும் டிஆர்எஸ்
ஹைதராபாத்: மத்திய அமைச்சர் அமித் ஷா ஹைதராபாத் வந்துள்ள நிலையில், அவரது செருப்பை மாநில பாஜக தலைவர் கழற்றும் வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
தெலங்கானாவில் அடுத்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பாஜகவை வலுப்படுத்தும் பணிகளால் அக்கட்சித் தலைமை மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அங்கு நல்கொண்டா மாவட்டத்தில் முனுகோட் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷா அங்குச் சென்றுள்ளார்.

அமித் ஷா
மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஞாயிற்றுக்கிழமை செகந்திராபாத்தில் உள்ள உஜ்ஜைனி மகான்காளி கோயிலுக்கு வழிபடச் சென்று இருந்தார். அவருடன் தெலங்கானா மாநில பாஜக தலைவர் பாண்டி சஞ்சயும் உடன் சென்று இருந்தார். கோயில் இருந்து வழிபட்டுவிட்டுத் திரும்பிய போது, பாண்டி சஞ்சய் செய்த செயல் தான் இப்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பி உள்ளது.

செருப்பு
கோயில் இருந்து அமித் ஷாவும் பாண்டி சஞ்சயும் வெளியே வருகின்றனர். அப்போது பாண்டி சஞ்சய் ஓடிச் சென்று அமித்ஷாவின் செருப்பை எடுத்து வந்து கொடுக்கிறார். இவை அத்தனையும் அந்த வீடியோவில் மிகத் தெளிவாகப் பதிவாகி உள்ளது. இணையத்தில் இது பெரும் சர்ச்சையாகி உள்ள நிலையில், ஆளும் டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் காங்கிரஸ் கட்சியினரும் இதைச் சாடியுள்ளனர்.

சுயமரிதை
தெலுங்கானா அமைச்சரும், முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகனுமான கே.டி.ராமராவ் இந்த வீடியோவை பகிர்ந்து, தெலங்கானா மக்கள் குஜராத்தின் அடிமைகளை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். தெலுங்கானாவின் "சுயமரியாதையை" இழிவுபடுத்தும் எந்த முயற்சியையும் முறியடிப்போம்" என்று பதிவிட்டுள்ளார். இது அடிமைத்தனத்தின் உச்சம் என டிஆர்எஸ் கட்சியின் ஐடி பிரிவி ஒருங்கிணைப்பாளர் சதீஷ் ரெட்டி சாடியுள்ளார்.

காங்கிரஸ்
அதேபோல காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், "தெலுங்கானா பாஜக மாநிலத் தலைவர் சஞ்சய் பண்டி அமித் ஷாவின் செருப்பை எடுத்து கொடுக்கிறார். தெலங்கானாவின் சுயமரியாதையே சீர்குலைக்கிறார். பாஜகவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பின் தலைவரின் நிலை என்ன என உண்மையைப் பாருங்கள்" என பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து இதுவரை பாஜக எவ்வித விளக்கத்தையும் அளிக்கவில்லை.

அமித் ஷா
முன்னதாக நேற்று தெலங்கானாவில் நடந்த பேரணியில் பேசிய அமித் ஷா, "கே.சி.ஆர் ஆட்சியை வேரோடு சாய்க்கப் போகிறோம.் தெலுங்கானா மக்களுக்கு அவர் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். மஜ்லிஸுக்கு பயந்து தெலுங்கானா விடுதலை தினத்தை கூட கே.சி.ஆர் அரசு கொண்டாடாவில்லை. விவசாயிகளுக்கு நலன் தரும் பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தை கேசிஆர் தர மறுத்து பாவம் செய்து வருகிறார். கே.சி.ஆர் அரசு விவசாயிகளுக்கு விரோதமானது..

வாரிசு அரசியல்
டிஆர்எஸ் அரசு அமையும் போது தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வர் ஆக்குவேன் என அவர் உறுதியளித்தனர். ஆனால், இதுவரை அவர்கள் அதைச் செய்யவில்லை. அடுத்து வரும் தேர்தல்களிலும் கேசிஆர் தான் முதல்வராகத் தொடர்வார். கேசிஆருக்கு பின் அவரது மகன் கே.டி.ஆர் முதல்வராக வருவாரோ தவிரத் தலித் சமூகத்தைச் சேர்ந்த யாரும் வரமாட்டார்கள்" என்று கடுமையாகச் சாடினார்.












Click it and Unblock the Notifications