லூஸ்டாக் விட்டா நாக்கை அறுப்போம்- தெலுங்கானா பாஜக தலைவருக்கு முதல்வர் சந்திரசேகர ராவ் வார்னிங்
ஹைதராபாத்: நெல் கொள் முதல் விவகாரத்தில் தெலுங்கானா பாஜக தலைவர் பந்தி சஞ்சய் அவதூறாக பேசிவந்தால் அவரது நாக்கை நாங்கள் அறுப்போம் என்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.
தெலுங்காவில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்) ஆட்சி நடைபெற்று வருகிறது. தெலுங்கானாவில் காலூன்றுவதற்கு பாஜக கடும் பிரயத்தனம் செய்து வருகிறது.
டி.ஆர்.எஸ் கட்சியின் அதிருப்தியாளர்களுக்கு வலைவீசி அதன் மூலம் ஆதாயம் அடைவது என்பதை பாஜக வியூகமாக கையில் எடுத்துள்ளது. அதேநேரத்தில் முதல்வர் சந்திரசேகர ராவின் மகன் ராமாராவ், மகள் கவிதா இடையேயான அதிகார சண்டையை எப்படி சாதகமாக்குவது எனவும் கணக்குப் போட்டு காய்களை நகர்த்துகிறது பாஜக.

செஸ் வரியை குறைக்கவும்
இந்த நிலையில் டி.ஆர்.எஸ். கட்சிக்கு எதிராக பாஜக பல்வேறு போராட்டங்களையும் அறிவித்து வருகிறது. இதற்கு பதிலடி தரும் வகையில் முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை மாநில அரசு குறைக்க வேண்டும் என்று சொல்வதற்கு பாஜக தலைவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான், பெட்ரோலிய பொருட்கள் மீதான செஸ்வரியை குறைக்க வேண்டும்.

உயர்த்தியவர்களிடம் கேளுங்க..
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தெலுங்கானாவை ஆளும் டி.ஆர்.எஸ். அரசு உயர்த்த வில்லை. நாங்கள் வாட் வரியை உயர்த்தாத போது ஏன் அதை குறைக்க வேண்டும்? யார் இந்த வாட் வரியை ஏற்றினார்களோ அவர்களிடம்தான் குறைக்க சொல்ல வேண்டும். அவர்களிடம்தான் இந்த கோரிக்கையை வலியுறுத்த வேண்டும். அர்த்தமே இல்லாமல் தெலுங்கானா அரசை பாஜக விமர்சிக்கக் கூடாது.

பாஜக தலைவரின் நாக்கை அறுப்போம்
தெலுங்கானாவில் நெல் கொள்முதல் பணிகளை மத்திய அரசுதான் மேற்கொண்டு வருகிறது. ஆனால் நெல் கொள்முதல் செய்ய மாட்டோம் என்கிறது மத்திய அரசு. இதனால்தான் நெல்லைத் தவிர இதர பயிர்களை பயிரிட வேண்டும் என்கிறோம். இதை புரிந்து கொள்ளாமல் தெலுங்கானா மாநில பாஜக தலைவர்கள் வெற்று சவடால்களை பேசக் கூடாது. எங்கள் மீது தொடர்ந்து அவதுறாக தெலுங்கானா பாஜக தலைவர் பந்தி சஞ்சய் பேசினால் அவரது நாக்கை அறுத்துவிடுவோம்.

மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்
பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை குறைக்காமல் சாமானியர்கள் மீது சுமையை சுமத்துகிறது மத்திய அரசு. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிக கணிசமாக குறைந்திருக்கிறது. ஆனால் மத்திய பாஜக அரசோ, பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலையை கடுமையாக உயர்த்தி வருகிறது. பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை குறைக்க வலியுறுத்தி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி போராட்டங்களை முன்னெடுக்கும். இவ்வாறு சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications