ராகுல் காந்தி தான் பிரதமர்! மத்தியில் பாஜக இல்லாத ஆட்சி..காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அதிரடி
ஐதராபாத்: ராகுல் காந்தி தலைமையில் பாஜக இல்லாத ஆட்சியை இந்தியாவுக்கு காங்கிரஸ் வழங்கும் என அக்கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த ராகுல் முடிவு செய்து பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வருகிறார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது.
இந்திய ஒற்றுமை பயணம் எனும் பாரத் ஜோடோ யாத்திரையயை ராகுல் காந்தி கன்னியாகுமரியில் துவங்கினார். கன்னியாகுமரில் இருந்து காஷ்மீர் வரை 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 150 நாட்களில் 3,500 கிலோமீட்டர் செல்ல உள்ளது.
140 பேரை பலி கொண்ட விபத்து: பிரதமர் மோடி வந்த போது பெயரை மறைத்த கொலைகார குஜராத் நிறுவனம்!
4வது மாநிலத்தில் யாத்திரை
கன்னியாகுமரியில் துவங்கிய பாரத் ஜோடோ யாத்திரை கேரளா, கர்நாடகா, ஆந்திரா வழியாக தெலங்கானாவை சென்றடைந்துள்ளது. இந்த யாத்திரையில் சமூக ஆர்வலர்கள் உள்பட ஏராளமானவர்கள் கைகோர்த்தனர். ராகுல் காந்திக்கு சிறுவர் சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை பலரும் பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது காங்கிரஸ் கட்சியினரை உற்சாகமடைய செய்துள்ளது.
மல்லிகார்ஜூன கார்கே பேச்சு
இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் தற்போது பாரத் ஜோடோ யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரையில் தெலங்கானா மாநிலம் நெக்லஸ் சாலையில் உள்ள இந்திரா காந்தி சிலை அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக தேர்வாகி உள்ள மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்று பேசினார். காங்கிரஸ் தலைவரான பிறகு முதல் முறையாக பொதுமேடையில் மல்லிகார்ஜூன கார்கே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் மோடி-கேசிஆர் ஒன்று
தெலங்கானா அரசு என்பது பாஜகவுக்கு எதிரானது அல்ல. பாஜகவுக்கு எதிரான என்றால் தெலங்கானாவில் உள்ள முதல்வர் சந்திரசேகரராவின் அரசு ஏன் முத்தலாக் மற்றும் விவசாய சட்டங்களை ஆதரித்தது. நாடாளுமன்றத்தில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (பாரத் ராஷ்டிர சமிதி) எம்பிக்கள் பாஜகவின் மசோதாக்களுக்கு ஆதரவாக உள்ளனர். மறுபுறம் மத்திய பாஜக அரசை எதிர்ப்பதாக கூறுகின்றனர். தெலங்கானா முதல் சந்திரசேகரராவுக்கும் (கேசிஆர்), பிரதமர் மோடிக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை. அவர்கள் இருவரும் ஒன்று தான்.
ராகுல் தலைமையில் ஆட்சி
இந்தியாவில் பாஜக அல்லாத ஆட்சியை கொண்டு வர வேண்டும். இது ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி செய்து காட்டும். காங்கிரஸ் கட்சியிடம் அதற்கான வலிமை உள்ளது. பாரத் ஜோடோ யாத்திரையில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல ஆதரவு உள்ளது. இதன்மூலம் மத்தியில் 2024ல் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சியை பிடிக்கும்.
பொய் சொல்லும் பிரதமர் மோடி
மேற்கு வங்கத்தில் பால விபத்து நடந்தபோது பிரதமர் மோடி அம்மாநில அரசை குற்றம்சாட்டினார். தற்போது குஜராத் மாநிலம் மோர்பியில் கேபிள் பாலம் அறுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பாலம் புனரமைப்புக்கு பின் திறக்கப்பட்ட 5 நாளில் விபத்து நடந்து பெண்கள், குழந்தைகள், முதியர்கள் என 100க்கும் அதிகமானவர்களின் உயிர்களை பறித்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி என்ன சொல்ல போகிறார்?. பிரதமர் மோடியை பொறுத்தமட்டில் பொய்களை தான் கூறி வருகிறது. பொய்களை பேசும் நபர்களை ஆதரித்தால் நாடு என்பது அழிந்துவிடும். ஜவஹர்லால் நேரு ஜனநாயகத்தை வலுப்படுத்தினார். அம்பேத்கரின் அரசியலமைப்பை காங்கிரஸ் கட்சி தான் பாதுகாத்து வருகிறது.
குஜராத் தேர்தல்
ஹிமாச்சல் பிரதேச மாநிலத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதனுடன் சேர்ந்த குஜராத் மாநிலத்துக்கு இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. ஏனென்றால் மோர்பியில் இடிந்து விழுந்த பாலம் போன்று பல பாலங்களை பிரதமர் மோடி திறந்து வைக்க வேண்டி உள்ளது. 2 கோடி வேலைவாய்ப்புகள் தருவதாக பிரதமர் மோடி தேர்தல் வேளையில் கூறினார். 8 ஆண்டுகள் முடிந்துவிட்டன. மொத்தம் 16 கோடி வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் எதுவும் செய்யவில்லை. இந்தியாவில் தற்போது வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. நாட்டில் 13 லட்சம் அரசு வேலைகள் காலியாக உள்ளன. ஆனால் மத்திய அரசு நிரப்ப முன்வரவில்லை'' என்றார்.