ரூ.40 கோடி ரொக்கம், 100 கோடி சொத்து, பல சீக்ரெட் லாக்கர் சாவிகள்.. ஹைதராபாத்தை அலறவிட்ட மெகா ரெய்டு
ஹைதராபாத்: தெலுங்கானாவில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய செயலாளராக இருந்த சிவ பாலகிருஷ்ணாவுக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டில் பல கோடி ரூபாய் பணமும், சுமார் 100 கோடி மதிப்பிலான சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன
அதிகாரிகள் ஊழல் செய்வதைக் கண்காணிக்கவும் ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசு ஊழல் தடுப்புப் பிரிவை வைத்துள்ளது. ஊழல் அதிகாரிகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதே இவர்கள் பணியாகும்.

இதற்கிடையே அப்படி தெலுங்கானாவில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளராக இருந்த நபருக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைவரையும் மிரள வைப்பதாக இருக்கிறது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
ஆய்வு: தெலுங்கானா மாநில ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளராக இருந்த சிவ பாலகிருஷ்ணா என்பவருக்குத் தொடர்புடைய பல இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தினர். அதில் அதிகாரிகள் கணக்கில் வராத 40 லட்சம் ரூபாய் மற்றும் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை மீட்டுள்ளனர். இந்த சிவ பாலகிருஷ்ணா ஹைதராபாத் பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் இயக்குநராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல் தடுப்பு பிரிவைச் சேர்ந்த 18 குழுக்கள் மொத்தம் 16 இடங்களில் சோதனை நடத்தியதில் இதைக் கண்டுபிடித்துள்ளனர். இன்னும் பல இடங்களில் சோதனை தொடர்ந்து நடப்பதாகவும் கூறப்படுகிறது. ரொக்கம், சொத்து டாக்குமெண்ட்கள் மட்டுமின்றி பல அதிநவீன விலையுயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
புகார் என்ன: பல ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப் பல கோடி ரூபாயை லஞ்சமாகப் பெற்றதாகச் சிவ பாலகிருஷ்ணா மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். அதன்படி ஹைதராபாத்தில் அவருக்குச் சொந்தமான வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள், அலுவலகங்கள் என மொத்தம் 20 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
மேலும், அவர் அலுவலகங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். பல மணி நேரம் நடந்த இந்த விசாரணை பகீர் கிளப்புவதாக இருந்தது. அவரது வருமானத்துக்கு மீறிப் பல சொத்துகள், குடியிருப்புகள், வங்கி டெபாசிட்கள் மற்றும் பினாமி சொத்துக்கள் ஆகியவை இருந்தது இந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இன்னும் சில இடங்களில் சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. அவையும் முடிந்த பிறகு முழுமையான தகவல்கள் தெரிய வரும்.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்ன: அங்கே கைப்பற்றப்பட்ட பொருட்களில் ரூ.40 லட்சம் ரொக்கம், இரண்டு கிலோ தங்க நகைகள், 60 உயர் ரக வாட்ச்கள், சொத்து ஆவணங்கள், வங்கி வைப்புத்தொகை டாக்குமெண்ட்கள் ஆகியவை அடங்கும். மேலும், 14 போன்கள், 10 லேப்டாப்கள், பல மின்னணு சாதனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பாலகிருஷ்ணா லஞ்சம் வாங்கிக் கொண்டு பல ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்ததாகப் புகாரை எதிர்கொள்கிறார். சோதனை சில இடங்களில் தொடரும் நிலையில், அடுத்த கட்டமாக அவரது பெயரில் உள்ள வங்கி லாக்கர்களிலும் சோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications