ஒட்டுமொத்தமாக மாறும் தெலுங்கானா அரசியல்.. 6 மாதத்தில் தலைகீழ் மாற்றம்! கடைசில கேசிஆர் செஞ்ச காரியம்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 6 மாதங்களில் சத்தமே இல்லாமல் 6 முக்கிய மாற்றங்கள் அரங்கேறியிருக்கிறது. அவை என்ன.. வரும் காலத்தில் அங்கு அரசியலில் இவை என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் பார்க்கலாம்.
நமது அண்டை மாநிலமான தெலுங்கானாவில் இப்போது கேசிஆர் தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், அங்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளை அங்குள்ள அரசியல் கட்சிகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது.

தெலுங்கானாவில் இப்போது ஆட்சியில் இருக்கும் கேசிஆர் கட்சி பாஜகவின் என்டிஏ கூட்டணியிலும் இல்லை. எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணியிலும் இல்லை. இதனால் அம்மாநில தேர்தல் முக்கியமானதாக மாறியுள்ளது.
இதற்கிடையே அங்குக் கடந்த 6 மாதங்களில் சத்தமே இல்லாமல் பல மாற்றங்கள் அரங்கேறி இருக்கிறது. இது தெலுங்கானா அரசியல் எதை நோக்கிச் செல்கிறது என்பதைக் காட்டுவதாகவே உள்ளதாகப் பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அப்படிக் கடந்த 6 மாதங்களில் அங்கு என்ன நடந்தது. தெலுங்கானாவில் தேர்தலுக்கு முன்பு என்னவெல்லாம் நடக்கும் என்பது குறித்து நாம் இதில் பார்க்கலாம்.
முதல் மாற்றம்: எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் பல மாநிலங்களில் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ ரெய்டு அதிகமாகவே இருக்கும்.. ஆனால், தெலுங்கானாவில் அதற்கு நேர்மாறான ஒரு சூழலே இருக்கிறது. அங்குக் கடந்த 6 மாதங்களில் அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித்துறை என அனைத்து தரப்பினரின் ரெய்டும் வெகுவாக குறைந்துள்ளது.
அதேபோல டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மியின் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டது அனைவருக்கும் தெரியும். அப்போதே இதில் தெலுங்கானா முதல்வர் கேசிஆரின் மகளும் தெலுங்கானா சட்டமன்ற உறுப்பினருமான கவிதாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இது குறித்து கவிதாவை விசாரிக்க அமலாக்கத் துறை சம்மன் எல்லாம் கூட அனுப்பி இருந்தது. இருப்பினும், கடந்த 6 மாதங்களில் இது குறித்து எந்தவொரு பெரிய முன்னேற்றமும் இல்லை.
இரண்டாவது மாற்றம்: அங்கு பாஜக கடந்த சில ஆண்டுகளாகவே வளர முயன்று வருகிறது. கடந்த 2018இல் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக மொத்தமுள்ள 118 இடங்களில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெல்ல முடிந்தது. அதேநேரம் அடுத்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக 17 லோக்சபா இடங்களில் 4இல் வென்றது. அதன் பின்னரும் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வந்தது.
இந்தச் சூழலில் பாஜக தெலுங்கானா தலைவர் பதவியில் இருந்து பாண்டி சஞ்சய் திடீரென நீக்கப்பட்டார். இவர் அங்கு ஆளும் கட்சியாக இருந்த பிஆர்எஸ் கட்சியுடன் மோதல் போக்கையே கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அங்குத் தேர்தலுக்கு 6 மாதங்கள் கூட இல்லாத நிலையில், இப்போது திடீரென தலைவர் மாற்றப்பட்டதும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
மூன்றாவது மாற்றம்: கடந்த காலங்களில் தெலுங்கானா முதல்வர் கேசிஆர் பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசி வந்தார். கிட்டதட்ட எந்தவொரு கூட்டம் என்றாலும் பாஜகவைச் சாடினார். அதிலும் குறிப்பாக மோடி மற்றும் அதானியை குறிப்பிட்ட கேசிஆர் பல இடங்களில் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆனால், கடந்த 6 மாதங்களில் இதுபோல எந்தவொரு கடுமையான பேச்சுகளையும் நம்மால் பார்க்க முடியவில்லை.
நான்காவது மாற்றம்: கேசிஆருக்கு தேசிய அளவில் செல்ல வேண்டும் என்பதில் ஆசை இருந்தது. இதன் காரணமாக அவர் தனது கட்சியின் பெயரைக் கூட தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி என்பதில் இருந்து பாரதிய ராஷ்ட்ரிய சமிதி என்று கூட மாற்றிக் கொண்டார். இருப்பினும், சமீப காலமாகத் தேசிய அரசியல் குறித்து மறந்தும் கூட கேசிஆர் வாய் திறப்பதில்லை. தேசிய அரசியல் என்பது மகாராஷ்டிரா தேர்தலுடன் கேசிஆருக்கு நின்றுவிட்டது.
5ஆவது மாற்றம்: அங்குக் காங்கிரஸின் வளர்ச்சி கடந்த 6 மாதங்களில் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறது. அதிலும் குறிப்பாகக் கர்நாடக தேர்தலில் அவர்களுக்குக் கிடைத்த வெற்றி காங்கிரஸ் தலைவர்களுக்கே பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது. இதனால் அவர்கள் தெலுங்கானா தேர்தலைக் குறிவைத்து வேலை செய்தது வருகிறார்கள்.
இதன் காரணமாகவே ராகுல் காந்தி கூட ஏற்கனவே அங்குச் சென்று மெகா பேரணிகளில் கலந்து கொண்ட கேசிஆரை விமர்சித்தார். மேலும், தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியும் இறங்கி வேலை செய்து வருகிறார். அதற்கு ஏற்றார் போல கேசிஆர் கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட டாப் தலைவர்கள் காங்கிரஸில் ஐக்கியமானார்கள்.
6ஆவது மாற்றம்: இது ரொம்பவே முக்கியமானது. பொதுவாகவே பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் முதல்வருக்கும் ஆளுநருக்கும் மோதல் போக்கு இருக்கவே செய்கிறது. ஆனால், தெலுங்கானாவில் ஆளுநர் vs ஆளுநர் தமிழிசை மோதல் உச்சம் தொட்டது. அவர்கள் சந்தித்துக் கூட பல மாதங்கள் ஆனது.
ஆளுநர் தமிழிசையே கூட இது தொடர்பாக வெளிப்படையாகப் பேசியிருந்தார். இந்தச் சூழலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தெலுங்கானா முதல்வர் கேசிஆர் நேற்றைய தினம் ஆளுநர் தமிழிசையே நேரில் சென்று சந்தித்தார். இது ரொம்பவே முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
இப்படிக் கடந்த 6 மாதங்களில் மட்டும் சத்தமே இல்லாமல் இந்த 6 முக்கிய மாற்றங்கள் அரங்கேறியுள்ளது. இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்கும் நிலையில், அங்கு அரசியல் எதை நோக்கிச் செல்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இது நிச்சயம் உதவும்.












Click it and Unblock the Notifications