"லவ் டார்ச்சர்.." பிரபல டிவி ஆங்கரை திருமணம் செய்ய கடத்திய பெண் தொழிலதிபர்.. மிரண்டு போன போலீஸ்
ஹைதராபாத்: பெண் தொழிலதிபர் ஒருவர், அங்குள்ள பிரபல டிவி சேனலில் பணிபுரியும் தொகுப்பாளரைத் திருமணம் செய்து கொள்ளக் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அந்த பெண் தொழிலதிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த தொகுப்பாளர் எப்போது எங்கே இருக்கிறார் என்பதைக் கண்காணிக்க அவரது காரில் இந்த பெண் தொழிலதிபர் ஜிபிஎஸ் டிராகிங் சாதனத்தையும் கூட வைத்தாக போலீசார் தெரிவித்தனர்.

யார் அந்த பெண்: டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழிலை நடத்தி வரும் அந்த 31 வயது பெண், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மேட்ரிமோனி தளத்தில் பிரபல டிவி தொலைக்காட்சி தொகுப்பாளரின் போட்டோவை பார்த்து அவருடன் பேசியுள்ளார். இருப்பினும், சில நாட்களில் தான் தான் பேசுவது டிவி தொகுப்பாளரிடம் இல்லை என்பது அந்த பெண்ணுக்குத் தெரிய வந்துள்ளது. டிவி தொகுப்பாளர் போட்டோவை வேறு ஒரு நபர் தனது கணக்கில் வைத்துள்ளது அதன் பின்னரே தெரிய வந்தது.

ஆனாலும், அந்த டிவி தொகுப்பாளரை இந்த பெண்ணுக்கு ரொம்பவே பிடித்து போய்விட்டது. அதன் பிறகு இணையத்தில் எப்படியோ தேடி பிடித்து அந்த டிவி தொகுப்பாளர் நம்பரை இந்த பெண் எடுத்துவிட்டார். அந்த தொகுப்பாளரைத் தொடர்ந்து கொண்ட பெண், மேட்ரிமோனி தளத்தில் நடந்ததைக் கூறியுள்ளார். இருப்பினும், தனக்கும் அதற்கும் தொடர்பு இல்லை என்றும் வேறு யாரோ தனது படத்தைப் பயன்படுத்தியுள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.
லவ் டார்ச்சர்: மேலும், இது தொடர்பாக அந்த தொகுப்பாளர் சைபர் கிரைம் போலீசாரிடமும் புகார் அளித்துள்ளார். அதன் பிறகும் அந்த பெண் விடாமல் டிவி தொகுப்பாளருக்கு மெசேஜ்களை அனுப்பி வந்துள்ளார். தொடர்ந்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அந்த பெண் கூறி வந்ததால் அவரது எண்ணை டிவி ஆங்கர் பிளாக் செய்துள்ளார்.
இருப்பினும், அவரை எப்படியாவது திருமணம் செய்தே தீர வேண்டும் என்பதில் அந்த பெண் உரிமையாளர் உறுதியாக இருந்துள்ளார். இதனால் அந்த பெண் கிரிமினல் தனமாகவும் யோசிக்க ஆரம்பித்துள்ளார். முதலில் அந்த ஆங்கர் எப்போது எங்கே இருக்கிறார் என்பதைக் கண்டறிய அவரது காரில் ஜிபிஎஸ் டிராகிங் கருவியைப் பொருத்தியுள்ளார். அதன் பிறகு நான்கு ரவுடிகளிடம் காசு கொடுத்த அவரை கடத்தவும் சொல்லி இருக்கிறார்.
கடத்தல்: அதன்படி கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி அந்த ஆங்கரை கடத்தியுள்ளனர். அந்த பெண் தொழிலதிபரின் அலுவலகத்திற்கு அந்த நபர் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு வைத்து அவரை மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அந்த ஆங்கர் என்ன சொல்லியும் அவரை விடுவதாக இல்லை. நிலைமையை உணர்ந்த அந்த நபர் வேறு வழியில்லாமல் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளச் சம்மதம் எனச் சொல்லி இருக்கிறார். அதன் பிறகு தான் அவரை விடுவித்துள்ளனர்.
தப்பித்தால் போதும் என வெளியே அந்த ஆங்கர், உடனடியாக உப்பல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் நடத்திய விசாரணை இவர் சொன்னது உறுதியான நிலையில், சம்மந்தப்பட்ட அந்த பெண் தொழிலதிபரையும் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications