தீவிரமடையும் ஹூட் ஹூட் 38 ரயில்கள் ரத்து: ஆந்திராவில் 1.11 லட்சம் மக்கள் வெளியேற்றம்
விசாகப்பட்டணம்: ஆந்திராவை நோக்கி நகரும் ஹூட்ஹூட் புயல் நாளை கரையை கடக்க இருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விரைவு ரயில்கள் உட்பட 38 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
கிழக்கு கடற்கரை பகுதியை நெருங்கிவரும் ஹூட் ஹூட் புயல், ஆந்திராவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படும் நிலையில், அம்மாநில கடற்கரையோர கிராமங்களிலிருந்து இதுவரை 1.11 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
புயல் அபாயத்தை சந்திக்கும் விதமாக, அங்கு 146 தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 5 லட்சம் பேரை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஆந்திர மாநில அரசு ஈடுபட்டுள்ளது.
வங்கக் கடலில் அந்தமான் தீவு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி புயல் சின்னமாக மையம் கொண்டுள்ளது. கடலோர ஆந்திராவை நோக்கி வந்து கொண்டிருக்கும் ஹூட்ஹூட் புயல் 12-ஆம் தேதி முற்பகலில் ஆந்திராவை நோக்கி நகரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
விசாகப்பட்டினம்- ஒடிஸா மாநிலம் கோபாலபூர் இடையே கரையைக் கடக்கும் ஹூட்ஹூட் புயல் மிக கடுமையான புயல் சேதத்தை ஏற்படுத்தும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ரயில்கள் ரத்து
இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழக்கு கடற்கரை மார்கத்தில் அக்டோபர் 12-ஆம் தேதியில் புவனேஷ்வர்-விசாகப்படினம் இடையே காலை 6 மணி முதல் இயங்கும்38 விரைவு மற்றும் பயணிகள் ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக கிழக்கு ரயில்வே இயக்குனர் ஜே.பி. மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

மாற்றுப்பாதையில் ரயில்கள்
கிழக்கு கடற்கரை மார்கத்தில் உள்ள புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, நீண்ட தூரம் செல்லும் பயணிகள் மற்றும் விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
விஜயவாடா, பல்லார்ஷா, நாக்பூர் ரயில்கள்
13352 ஆலப்புழா-தன்பத் விரைவு ரயில்
22641 திருவனந்தபுரம்-ஷலிமர் விரைவு ரயில்
12666 கன்னியாகுமரி-ஷலிமர் விரைவு ரயில்
இதைத் தவிர, நாளை மற்றும் நாளை மறுநாள் 13351 தன்பத்- ஆலப்புழா வரும் விரைவு ரயில், ஆலப்புழா ரயில் நிலையத்துக்கு இரவு 8.20க்கு வந்து சேரும்.

பேரிடர் மீட்புக்குழுவினர்
புயல் கரையை கடப்பதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆந்திர மாநில அரசு மெற்கொண்டு வருகிறது. மத்திய அரசும் பேரிடர் மீட்பு குழுவினரை ஆந்திராவின் கடலோர கிராமங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

146 தற்காலிக முகாம்கள்
இதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசாகப்பட்டினத்திலிருந்து 24,000-க்கும் மேலானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், விஜயநகரத்திலிருந்து 15,000 பேரும், ஸ்ரீகாகுளத்திலிருந்து 46,000 பேரும் மற்றும் கிழக்கு கோதாவரி போன்ற தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களுக்காக ஆங்காங்கே மொத்தம்146 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தயார் நிலையில் கடற்படை
இந்திய கடற்படையின் சார்பில் 4 கப்பல்கள் விசாகப்பட்டின துறைமுகத்தில், ரப்பர் படகுகள், உடை, உணவு, போர்வை, மருத்துவ உதவிப் பொருட்களுடன் போன்றவையுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடற்படையின் சுமார் 5,000 வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

நிவாரணப் பொருட்கள்
மேலும், நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதற்காக விமானப்படை சார்பில் 6 விமானங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில், கூடுதலாக 30ஆழ்கடல் நீச்சல் வீரர்களும் மீட்பு பணிக்காக வைக்கப்பட்டுள்ளனர்.

சந்திரபாபு நாயுடு
ஹூட் ஹூட் புயல் நெருங்கி வரும் நிலையில், புயல் தொடர்பான புகைப்படங்களை அளிக்குமாறு இஸ்ரோ ஆய்வு மையத்திற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரியுள்ளார்.

மக்கள் வெளியேற்றம்
ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாகுளம், விசியநகரம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, விசாகப்பட்டினம் ஆகிய 5 கடலோர மாவட்டங்களில் 64 மண்டலங்களில் உள்ள 436 கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 370 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications