திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் சுவேந்து அதிகாரி
கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் சுவேந்து அதிகாரி பாஜகவில் இணைந்தார். மேலும் ஒரு முன்னாள் எம்பி, சிட்டிங் எம்பி, 10 எம்எல்ஏக்களும் இணையவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மேற்கு வங்க மாநிலத்தில் மிட்னாபூரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பொதுக் கூட்டத்தை நடத்துகிறார். இதே இடத்தில்தான் கடந்த வாரம் முதல்வர் மம்தா பானர்ஜியும் பொதுக் கூட்டத்தை நடத்தியிருந்தார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் சுவேந்து அதிகாரி. இவர் மேற்கு வங்கத்தில் ஊரக பகுதியில் கட்சியை வலிமைப்படுத்தும் பணியில் சிறந்துவிளங்கினார். இந்த நிலையில் டிசம்பர் 16-ஆம் தேதி நந்திகிராம் தொகுதியின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
அத்துடன் கடந்த மாதம் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். இதெல்லாம் அவர் பாஜகவில் இணையத்தான் என தகவல்கள் வெளியாகின.1998-ஆம் ஆண்டு கட்சி தொடங்கிய நாள் முதல் சுவேந்துவின் குடும்பத்தினர் திரிணமூலில் இருந்து வருகிறார்கள்.
அத்தகைய குடும்பத்தில் இருந்து வந்த சுவேந்து கிழக்கு மிட்னாபூர் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் 63 சட்டசபை தொகுதிகளை கைப்பற்ற காரணமாக அமைந்தார். அதாவது மொத்தமுள்ள 294 சட்டசபை தொகுதிகளில் சுவேந்து கைப்பற்றியது 5-இல் ஒரு பகுதியாகும். இதனால் நல்ல பல பதவிகளை கொடுத்து மம்தா அழகுபார்த்தார்.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் பொதுக் கூட்டத்திற்கு வந்துள்ள அமித்ஷாவை சந்தித்து சுவேந்து பாஜகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகின. பொதுக் கூட்டத்திற்காக மிட்னாபூர் வந்துள்ள அமித்ஷா சித்தேஸ்வர் கோயிலில் பிரார்த்தனை செய்தார். பின்னர் சுதந்திர போராட்ட வீரர் குதிராம் போஸின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில் முன்னாள் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் சுவேந்து அதிகாரி பாஜகவின் பேரணியில் கலந்து கொண்டார். இதையடுத்து அவர் பாஜகவில் இணைந்தார். அவருக்கு அமித்ஷாவும் பாஜக தேசிய துணை தலைவர் முகுல் ராயும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் ஒரு முன்னாள் எம்பி, ஒரு சிட்டிங் எம்பி, 10 எம்எல்ஏக்களும் பாஜகவில் அமித்ஷா முன்பு இணைகிறார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று ராஜினாமா கடிதம் கொடுத்த எம்எல்ஏக்களில் ஜிதேந்திர திவாரி தற்போது யூ டர்ன் அடித்து தனது ராஜினாமா கடிதம் மீது தீதி நடவடிக்கை எடுக்கக் கூடாது என கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.