ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதி சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதி ஒருவருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். தொடர்ந்து அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
காஷ்மீரில் கடந்த சில நாட்களாக எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், ராணுவத்தினரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனிடையே பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக காஷ்மீருக்குள் 60க்கும் மேற்பட்ட தற்கொலைப் படை தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என உளவுத்துறை வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.

இந்த நிலையில் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்த் வாரா பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதி பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச்சண்டையில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த மோதலில் ராணுவ ஜவான் ஒருவரும் காயம் அடைந்தார். சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதி எந்த இயக்கத்தை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. வேறு ஏதேனும் தீவிரவாதிகள் அப்பகுதியில் பதுங்கியுள்ளனரா? என்று பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications