டெல்லி அருகே 10 பாக். தீவிரவாதிகள் பதுங்கல்! குடியரசு தினவிழாவை சீர்குலைக்க சதியா?
டெல்லி: டெல்லி அருகே 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. குடியரசு தின கொண்டாட்டத்தை அவர்கள் சீர்குலைக்க திட்டமிடக்கூடும் என்றும் கருதப்படுகிறது.
நாட்டின் குடியரசு தினம், வருகிற 26-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள், நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
10 தீவிரவாதிகளும் உத்தரபிரதேச மாநிலம் பரிதாபாத்துக்கு முதலில் சென்றதாகவும், அங்கு ஏராளமான வெடிபொருட்களை வாங்கி விட்டு, காசியாபாத் நகருக்குள் ஊடுருவி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
காசியாபாத் நகரம், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்ததாக இருந்தபோதிலும், டெல்லிக்கு அருகே உள்ளது. இதையடுத்து தீவிரவாதிகளைத் தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.