மேற்கு வங்கமே கொண்டாடும் சிறுவன் முர்சலீன் ஷேக்.. புத்திக்கூர்மையால் ரயில் விபத்தை தடுத்த ஹீரோ
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தனது புத்திக்கூர்மையால் மிகப்பெரிய ரயில் விபத்தை தவிர்த்துள்ளார் 10 வயது சிறுவன். தான் அணிந்திருந்த சிவப்பு நிற சட்டையை கழற்றி அசைத்து ரயிலை நிறுத்தி பெரு விபத்தை தவிர்த்துள்ளார் சிறுவன் முர்சலீன் ஷேக்.
இதை கேள்விப்பட்ட அம்மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் அச்சிறுவனின் வீட்டிற்கே சென்று பாராட்டி கல்வி செலவு முழுதையும் ஏற்பதாக அறிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தைச் சேர்ந்த 5-ஆம் வகுப்பு சிறுவன் முர்சலீன் ஷேக். 10 வயது ஆகிறது. கடந்த வெள்ளிக்கிழமை, முர்சலீன் தனது கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு குளத்தில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். மால்டா மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருவதால், ரயில் பாதைக்கு அடியில் நிலம் சரிந்திருந்தது. அதனால் ரயில் தண்டாவளத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டிருந்தது. இதை கவனித்தசிறுவன் அடுத்து செய்த காரியம் அவனை அந்த பகுதி மக்களின் ஹீரோவாக மாற்றி உள்ளது. அவருக்கு வடகிழக்கு ரயில்வே விருது வழங்கி உள்ளது.என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஹரிச்சந்திராபூரின் மஷால்டா கிராமப் பஞ்சாயத்தில் உள்ள கரியாலி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் முர்சலீன், அருகிலுள்ள குளத்தில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார. அப்போது ரயில் பாதைக்கு அடியில் நிலம் சரிந்திருந்ததையும், அதில் ரயில் பாதையில் பெரிய பள்ளம் ஏற்பட்டிருப்பதையம் கண்டார்.
அந்த நேரத்தில், சீல்டா-சில்சார் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் அந்த பாதையில் அசுர வேகத்தில் ஓடிக்கொண்டிருந்ததை சிறுவன்முர்சலீன் பார்த்தார். அப்போது என்ன செய்யலாம் என்று யோசித்த முர்சிலீன், தனது சிவப்பு நிற டி-ஷர்ட்டை திடீரென கழற்றி, ரயில் ஓட்டுனர் தூரத்தில் இருந்து பார்க்கும் வகையில் அதை வலுவாக அசைத்து வரிசையில் நின்றார். சிறுவனைப் பார்த்த ரயில் ஓட்டுநர் சரியான நேரத்தில் ரயிலை நிறுத்திவிட்டார்.
அவர் என்ஜினில் இருந்து கீழே இறங்கி வந்து பார்த்த போது, ரயிலை நிறுத்தியதற்கான காரணத்தை முர்சலீன் அவரிடம் விளக்கினார். சேதமடைந்த தண்டவாளத்தைப் பார்த்த ரயில் ஓட்டுநர் (லோகா பைலட்), பல பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய சிறுவனைப் பாராட்டினார். உடனே பாலுகா ரோடு ஸ்டேஷன் ஜிஆர்பி, ஆர்பிஎப் மற்றும் ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தார்கள்.
ரயில் தண்டாவளத்திற்கு கீழ் இருந்த பள்ளதை சரி செய்த பின்னர், ஒன்றரை மணி நேரம் கழித்து ரயில் சில்சாருக்கு புறப்பட்டது. இந்த செய்தி பரவியவுடன், முர்சலீன் அப்பகுதியில் ஹீரோவானார். அவரது தாயார் மோர்சினா, தனது மகனின் செயலால் பெருமைப்படுவதாக கூறினார்.
ரயில்விபத்தை தடுத்த முர்சலீனுக்கு வடகிழக்கு ரயில்வே பரிசும் வெகுமதியும் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே அதிகாரி சப்யாசாச்சி டி கூறுகையில், "இந்த சம்பவம் எங்கள் கவனத்திற்கு வந்திருக்கிறது. விபத்தை தடுத்து பலரை காப்பாற்றிய சிறுவனுக்கு வெகுமதி அளிக்க முடிவு செய்துள்ளோம். வெகு விரைவில் அவருக்கு பரிசு வழங்கப்படும்" என்றார்.
இதனிடையே சிறுவன் ரயிலை காப்பாற்றிய சம்பவம் குறித்து கேள்விப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் பலிக்குல் இஸ்லாம், அச்சிறுவனின் வீட்டிற்கு சென்று, அவரின் படிப்பு செலவு முழுவதையும் தானே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications