அடேங்கப்பா.. 100 சதவீத வாக்குப்பதிவு.. அதுவும் 4 மணிக்கே போலிங் ஓவர்.. கர்நாடகாவில் அதிசய கிராமம்!
பெங்களூர்: நகர்ப்புற மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டாமல் இருந்து வரும் நிலையில் கர்நாடகாவில் ஒரு வாக்குச்சாவடியில் 100% வாக்குப்பதிவு நடந்துள்ளது. அதுவும், வாக்குப்பதிவு நேரம் நிறைவடைவதற்கு 2 மணி நேரம் முன்னதாகவே அங்கு 100 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது. இதையடுத்து இன்று 2வது கட்டமாக லோக்சபா தேர்தல், கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் மொத்தம் 88 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.

கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக நேற்று (ஏப்ரல் 26) தேர்தல் நடைபெற்றது. கடந்த 24ஆம் தேதி மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் அங்கு நிறைவு பெற்ற நிலையில், நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. கர்நாடகாவில் சராசரியாக 69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக, கர்நாடகாவின் நகர்ப்புற பகுதியான பெங்களூர் மத்தி, பெங்களூர் தெற்கு லோக்சபா தொகுதிகளில் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன. நகர்ப்புற பகுதி வாக்காளர்கள் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டாத நிலையில், கிராமப்புற அதுவும் அடிப்படை வசதிகள் கூட கிடைக்காத மக்கள் 100 சதவீத வாக்குப்பதிவு செய்து ஆச்சர்யம் அளித்துள்ளனர்.
கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தின் பெல்தங்கடி தாலுக்காவில் உள்ள குக்குக்கிராமம் பஞ்சருமலே. பஞ்சருமலேவில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், வெள்ளிக்கிழமை நடந்த மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த குக்கிராமத்தில் மொத்தம் 111 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரே வாக்குச் சாவடிக்கு வந்து வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைச் செலுத்தினர். மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே, அந்த வாக்குச்சாவடியில் ஓட்டுரிமை உள்ள அனைவருமே வாக்களித்து முடித்தனர். இதனால், அங்கு முன்கூட்டியே வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
பஞ்சருமலே குக்கிராமத்தில் வனவாசிகள், பழங்குடி விவசாயிகள் மற்றும் வன குப்பைகளை சேகரிப்பவர்கள் வசிக்கின்றனர். மின்சாரம் மற்றும் போக்குவரத்து இணைப்பு இல்லாத போதிலும், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள வற்றாத நீர் ஆதாரங்களில் இருந்து வரும் தண்ணீரைப் பயன்படுத்தி மக்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.
இந்த கிராம மக்கள், பெல்தங்கடியில் உள்ள தங்கள் தாலுகா அலுவலகத்தை அடைய, முடிகரே வழியாக பேருந்தில் பயணம் செய்ய வேண்டும் அல்லது அடர்ந்த காட்டுப்பகுதி வழியாக எட்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்து செல்ல வேண்டும். அப்படி இருக்கும் போதும் அந்த ஊர் மக்கள் அனைவரும் ஆர்வத்தோடு வந்து வாக்களித்துள்ளனர்.
இதுகுறித்து அந்த ஊர் வாக்காளர் ஒருவர் கூறுகையில், "நகரங்களுக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளையும் அனைத்து கிராமங்களுக்கும் வழங்க முடியாது என்பது எங்களுக்குத் புரியும். எங்களுக்கு அரசு வசதிகள் கிடைக்கவில்லை என நாங்கள் புகார் செய்யவில்லை. நாங்கள் 500 பேர் இருந்திருந்தாலும் அனைவரும் வாக்களித்திருப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023ல் நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலின்போது, இந்த பஞ்சருமலே வாக்குச்சாவடியில் 99 சதவீதம் வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications