10 ஆடுகளை விற்று வீட்டில் கழிப்பறை கட்டிய 105 வயது மூதாட்டிக்கு விருது !
டெல்லி: தனது 10 ஆடுகளை விற்று கழிப்பறை கட்டிய 105 வயது மூதாட்டிக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 17 ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி விருதினை வழங்க உள்ளார்.
நாட்டின் அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் முறையான சுகாதார வசதி, சுத்தமான கழிப்பறை உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு தொடங்கப் பட்ட திட்டமே "ஸ்வாச் பாரத் அபியான்' எனும் தூய்மை இந்தியா திட்டமாகும். மத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலம் கிராமங்கள் தோறும் கழிப்பறை கட்ட மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அண்மையில் சத்தீஸ்கர் மாநிலம் தம்தாரி மாவட்டத்தில் உள்ள கோட்டோபாரி கிராமத்தைச் சேர்ந்த குன்வர் பாய் (105) என்ற மூதாட்டி கழிவறை கட்டுவதற்காக தான் வைத்திருந்த 10 ஆடுகளை விற்றுள்ளார்.
இதனிடையே சத்தீஸ்கர் மாநிலத்தில், கிராம நகரம் திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் மோடி தொடங்கி வைத்தார். நக்ஸல்கள் ஆதிக்கம் நிறைந்த ராஜன்காவ்ன் மாவட்டம் குர்பட் கிராமத்தில், 'ரூர்பன்' என்ற அந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது, குன்வர் பாய் கழிப்பறை கட்டிய தகவல் அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்த மூதாட்டியின் காலை தொட்டு வணங்கினார்.
இந்நிலையில், தனது 105 வயதில் கழிப்பறை கட்டி நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்த அவரின் இந்த செயலை பாராட்டும் விதமாக அவருக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 17 ம் தேதி டெல்லியில் நடக்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி விருதினை வழங்க உள்ளார்.












Click it and Unblock the Notifications