அயோத்தியில் பிரம்மாண்ட ஊதுபத்தி.. 108 அடி நீளம்...3,160 கிலோ எடை.. நகரமெங்கும் பரவும் நறுமணம்
அயோத்தி: ராமஜென்ம பூமியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தயாராகி வருகிறது. பக்தி மணம் கமழ ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் நகரமெங்கும் ஊதுபத்தி நறுமணம் பரவி வருகிறது. இரண்டு இஸ்லாமிய பெண்கள் ராம ஜோதியை அயோத்திக்கு எடுத்து வந்திருக்கின்றனர்.
ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேகம் நடைபெறும் நாளும் நேரமும் பல்வேறு சிறப்புகளை கொண்டது. சக்திவாய்ந்த அபிஜித் முகூர்த்தம் நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை உள்ள காலமே அபிஜித் முகூர்த்தம் எனச் சொல்லப்படுகிறது.

ஜனவரி 22ல் குழந்தை ராமரின் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவிற்கு இந்தியாவில் உள்ள சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என ஏராளமானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்காக குஜராத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட 108 அடி ஊதுபத்தி இன்று ஏற்றப்பட்டது. அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி கோலகலமாக திறக்கப்படவுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் அன்று பங்கேற்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க 1 லட்சம் லட்டுக்களை திருப்பதி தேவஸ்தானம் அனுப்புகிறது. அயோத்தி ராமர் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை விழாவின் போது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க 25 கிராம் எடையில் ஒரு லட்சம் லட்டுக்களை வழங்க திருப்பதி தேவஸ்தானம் ஒப்புக்கொண்டுள்ளது.
பல மாநிலங்களில் இருந்து பிரசாதங்கள் அனுப்ப நாக்பூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் விஷ்ணு மனோகர் 7000 கிலோ அளவுக்கு ரவையில் அல்வா தயாரிக்கவுள்ளார். இதில் 900 கிலோ ரவை, ஆயிரம் கிலோ சர்க்கரை, 1000 கிலோ நெய், 2000 லிட்டர் பால், 2500 லிட்டர் தண்ணீர், 75 கிலோ ஏலக்காய், 300 கிலோ பாதாம் மற்றும் திராட்சை ஆகியவவை பயன்படுத்தப்படவுள்ளது.
குஜராத்தின் வதோதரா நகரில் தயாரிக்கப்பட்ட 108 அடி நீள ஊதுபத்தி அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுமார் 3,160 கிலோ எடையும், மூன்றரை அடி சுற்றளவும் கொண்ட ஊதுபத்தி இன்று ஏற்றப்பட்டது. ஊதுபத்தியின் நறுமணம் சில கிலோமீட்டர் தூரத்திற்கு வீசுகிறது. இதனால் அயோத்தி நகரமே நறுமணத்தில் மிதக்கிறது. தூபம் போடும்போது எழும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் இந்த குச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அலிகர் நகரில் இருந்து சத்ய பிரகாஷ் சர்மா என்ற பூட்டு தயாரிப்பாளர் ஒருவர், 10 அடி உயரம், 4.6 அடி அகலம் மற்றும் 400 கிலோ எடையில் பூட்டு தயாரித்து அனுப்பியுள்ளார். அலிகர் அருகிலுள்ள ஏட்டாவில் இருந்து ராட்சத கோயில் மணி தயாரிக்கப்பட்டு, அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் எடை 2,100 கிலோ. சூரத் வைர வியாபாரி ஒருவர் 5,000 அமெரிக்க வைரங்களும் 2 கிலோ வெள்ளிக் கட்டியும் ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளைக்கு அனுப்பி வைத்துள்ளார்
இஸ்லாமியர்கள் பலரும் இராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்காக நன்கொடை வழங்குவதோடு, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நஸ்னீன் அன்சாரி, நஜ்மா பர்வீன் ஆகியோர் ‛கடவுள் இராமர் நமது முன்னோர். இந்தியர்களின் டி.என்.ஏ.வும் ஒன்றுதான்' என்ற செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இராமஜோதியை எடுத்து வந்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications