111 பெண்களுக்கு தந்தையாக இருந்து திருமணம் செய்து வைத்த குஜராத் தொழில் அதிபர்
சூரத்: குஜராத்தில் தொழில் அதிபர் ஒருவர் தந்தையை இழந்த 111 பெண்களுக்கு தந்தையாக இருந்து திருமணம் செய்து வைத்துள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத்தில் வைர வியாபாரம், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் பி.பி. சவானி குழும தலைவர் மகேஷ் சவானி. அவர் தந்தையை இழந்து தவிக்கும் 3 முஸ்லீம் பெண்கள் உள்பட 111 பேருக்கு தந்தையாக இருந்து சூரத்தில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து வைத்தார்.

ஒரு பக்கம் இந்து முறைப்படியும், மறுபக்கம் முஸ்லீம் முறைப்படியும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் வைரஸ் காய்ச்சல் காரணமாக அவர் வரவில்லை. இருப்பினும் அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் வாஜுபாய் வாலா, பாஜக தலைவர்கள், அமைச்சர் புருஷோத்தம் ருபாலா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து மகேஷ் சவானி கூறுகையில்,
நான் தந்தையை இழந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் முன்நின்று திருமணம் செய்து வைத்துள்ளேன். இதோடு அவர்களுக்கும் எனக்குமான தொடர்பு முடியாது. அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் தொடர்பில் இருப்பேன். கடந்த 2007ம் ஆண்டில் இருந்து இது போன்ற திருமணங்களை நடத்தி வருகிறேன். தொடர்ந்து நடத்தியும் வருவேன்.
இவ்வாறு நான் இதுவரை மொத்தம் 251 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளேன் என்றார்.
குஜாராத்தில் சவானி குழுமத்திற்கு சொந்தமாக 5 பள்ளிகள் மற்றும் ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications