கேரளாவில் 12 மாவட்டங்களில் உச்சகட்ட அபாயம்.. ஒரே நாளில் 110 பேர் பலி!
கேரளாவில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் 12 மாவட்டங்களுக்கு உச்சக்கட்ட அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video

திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் 12 மாவட்டங்களுக்கு உச்சக்கட்ட அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் ஏற்படும் நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் தொடர்ந்து புதைந்த வண்ணம் உள்ளன. இதனால் இதுவரை 324க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

100க்கும் மேற்பட்டோர் மாயம்
நூற்றுக்கணக்கான மக்கள் மாயமாகியுள்ளனர். அவர்களின் நிலை என்னவானது என்பது குறித்த தகவல் இல்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2.5 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

12 மாவட்டங்கள் பாதிப்பு
கேரளாவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

உச்சக்கட்ட அபாயம்
அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு, ஊருக்குள் புகுந்துள்ளது. இதில், 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு உச்சக்கட்ட அபாயம் நிலை நீடிக்கிறது.

தாழ்வான பகுதிகளில் வெள்ளம்
இடுக்கி அணையின் மொத்த கொள்ளளவு நீர்மட்டம் 2404 அடி, இதில், நேற்று காலை 2402.50 அடியாக நீர்மட்டம் இருந்தது. ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆலுவா, எர்ணாகுளத்தின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது.

ஒரே நாளில் 100 பேர் பலி
நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி நேற்று முன்தினம் ஒரேநாளில் மட்டும் 100 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மேலும் 10 பேர் இறந்தனர். நிலச்சரிவில் சிக்கிய 10க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை.

விமான நிலையத்தில் வெள்ளம்
பல இடங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. கொச்சி விமான நிலையம் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால் வரும் 26ஆம் தேதி வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டித்தீர்த்த மழை
கேரளாவில் கடந்த 3 வாரங்களில் 38 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. இடுக்கி மாவட்டத்தில் 84 சதவீதமும், பாலக்காட்டில் 70 சதவீதமும், மலப்புரத்தில் 50 சதவீதமும், கோட்டயத்தில் 47 சதவீதமும் கூடுதல் மழை பெய்துள்ளது. இடுக்கி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் 20 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது.

அபாய எச்சரிக்கை
எர்ணாகுளம் இடுக்கி மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த 2 மாவட்டங்களிலும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட்
பத்தனம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று வரை வெள்ள அபாய எச்சரிக்கையாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்ச் அலர்ட்
கோட்டயம், ஆலப்புழா, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் ‘ஆரஞ்ச் அலர்ட்' எனப்படும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட வடமாவட்டங்களில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் அடிக்கும் பலத்த காற்றுடன் மழையும் பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications