கங்கை நதிக் கரையில் வள்ளுவருக்கு 12 அடியில் சிலை.. பாஜக எம்.பி. தருண் விஜய் தகவல்
டெல்லி: உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் உள்ள கங்கை நதிக்கரையில் திருவள்ளுவரின் 12 அடி உயர சிலை, வரும் 26ம் தேதி திறக்கப்படும் என்று பாஜக எம்.பி. தருண் விஜய் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய், திருக்குறளால் ஈர்க்கப்பட்டவர். கடந்த பல வருடங்களாக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, திருக்குறளின் பெருமை குறித்து பரப்புரை நிகழ்த்தி வருகிறார். திருவள்ளுவருக்கு தமது சொந்த மாநிலத்தில் சிலை அமைக்க வேண்டும் என்றும் அவர் முயற்சி மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘ஹரித்துவாரில் உள்ள கங்கை நதிக்கரையில் வரும் 26ம் தேதி திருவள்ளுவரின் 12 அடி உயர சிலை திறக்கப்படும்' எனக் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கும்பமேளா நடைபெறும் கங்கைக்கரையில் 12 அடி உயர திருவள்ளுவர் சிலை 26ம் தேதி திறக்கப்படுகிறது. சிலையை உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத் திறந்து வைக்கிறார். விழாவில் பல மாநில முதல்வர்கள், தமிழக ஆளுநர் ரோசையா உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக வரும் 18ம் தேதி சென்னை செல்ல இருக்கிறேன்" என அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications