12 எஸ்.டி சிறுமிகளுக்கு பாலியல் வன்முறை… 7 ஆசிரியர்கள் உள்பட 11 பேர் கைது.. ஆசிரமத்தில் பயங்கரம்
மகாராஷ்டிர மாநிலத்தில் ஆசிரமத்தில் தங்கி படித்த 12 சிறுமிகளை பாலியல் வன்முறை செய்த 7 ஆசிரியர்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் உறைவிடப் பள்ளியில் தங்கிப் படித்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதனையடுத்து செய்யப்பட்ட ஆய்வில் 12 சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பயங்கரம் வெளியே தெரிந்தது. இதுதொடர்பாக 7 ஆசிரியர்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகர் மும்பையில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது புல்தானா மாவட்டம். இந்த இடத்தில் பழங்குடியின குழந்தைகள் படிக்கும் உண்டு உறைவிட பள்ளி ஒன்று அறக்கட்டளையின் மூலம் செயல்பட்டு வருகிறது. அரசாங்கப் பணத்தில் நடத்தப்படும் நினத் ஆஷ்ரன் என்ற ஆசிரமத்தில் பழங்குடியின குழந்தைகள் தங்கி படித்து வந்தனர். இவர்கள் பண்டிகை போன்ற விஷேச நாட்களில் மட்டுமே அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பப்படுவார்கள். அப்படி சில தினங்களுக்கு முன் தீபாவளி பண்டிகையை கொண்டாட விடுமுறைக்காக, ஜல்கான் மாவட்டத்திற்கு சிறுமி ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பண்டிகை காலத்தில் வீட்டில் மற்ற சிறுவர் சிறுமியர் ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்க, ஆசிரமத்தில் இருந்து சென்ற சிறுமி மட்டும் ஒரு மூலையில் சோகமாக அமர்ந்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த பலரும் ஏன் எல்லோருடன் சகஜமாக விளையாடாமல் தனித்து சோகமாக அமர்ந்திருக்கிறாய் என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த சிறுமி, தனக்கு வயிறு கணமாக இருக்கிறது என்றும், வயிற்றில் வலி இருக்கிறது என்றும் குழந்தைத்தனம் மாறாமல் சொல்லியிருக்கிறார். உடனே மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டார் சிறுமி. அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் ஆசிரமத்தில் இருந்த அனைத்து சிறுமிகளை பரிசோதனை செய்ததில் 12 சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர், ஆசிரியர் உள்பட ஆசிரமத்தில் வேலை பார்த்த மேலும் 4 பேர்கள் என 11 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட 12 சிறுமிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்த விசாரணையில் இந்த ஆசிரமம் குறித்த பல்வேறு திடுக்கிடும் மர்மங்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இந்த ஆசிரமத்தில் இருந்த 800 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சுகாதாரக் கேடு, முறையான மருத்துவ வசதி இன்மை, உணவில் உள்ள குறைபாடு என பல்வேறு காரணங்களால் 800 பேர் உயிரிழந்துள்ளனர்.
பழங்குடியின சிறுமிகள் தங்கிப் படிக்கும் இந்த ஆசிரமத்தில் ஒரு பெண் கண்காணிப்பாளர் கூட இதுவரை இருந்ததில்லை என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications