திறந்திருந்த சாக்கடையில் மூழ்கி 12 வயது சிறுவன் பலி; சுற்றுலா முடிந்து திரும்பிய போது பரிதாபம்!
டெல்லி: சாலையில் திறந்து கிடந்த சாக்கடையில் விழுந்து 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் டெல்லியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மில்லினியம் பஸ் டிப்போ அருகில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பள்ளிச் சுற்றுலா முடிந்து நண்பர்களுடன் பேசியபடி நேற்று மாலை 3 மணியளவில் இந்த சாலையில் நடந்து சென்றுள்ளான் லபியான்ஸ் என்ற 12 வயது சிறுவன்.

அப்போது சாலையில் திறந்து கிடந்த சாக்கடைக் குழியை அவன் கவனிக்கவில்லை. இதனால் எதிர்பாராதபடி அந்தக் குழியில் அச்சிறுவன் விழுந்துள்ளான்.
மற்றவர்கள் உதவிக்கு வருமுன்னரே அச்சிறுவன் மூழ்கி விட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பின்னர் தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சாக்கடையில் மூழ்கிய அச்சிறுவனின் உடலை மீட்டனர்.
போலீசாரின் விசாரணையில், அந்தச் சாக்கடையானது சுத்தம் செய்வதற்காக திறந்து வைக்கப் பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. ஆனால், ஊழியர்கள் யாரும் அதன் அருகே இல்லாததால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
லபியான்ஸின் தந்தை கடந்த வருடம் உயிரிழந்து விட, அவரது தாயார் வீட்டு வேலை செய்து மகனைப் படிக்க வைத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications