Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவையைப் போல கரூரிலும் ஒரு பிளஸ்டூ மாணவி மரணம்: பாலியல் தொல்லை என்று கூறும் கடிதம்

Subscribe to Oneindia Tamil
கரூர் வெங்கமேடு காவல் நிலையம்.
BBC
கரூர் வெங்கமேடு காவல் நிலையம்.

கரூரில் கடிதம் எழுதிவைத்துவிட்டு பிளஸ் 2 மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் விவகாரம், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"கடும் விரக்தி காரணமாகவே இப்படியொரு முடிவை மாணவி எடுத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது" என்கின்றனர் காவல்துறையினர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 பயின்று வந்த மாணவி ஒருவர், வெள்ளிக்கிழமை வழக்கம்போல பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். பின்னர், மாலை ஆறு மணியளவில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தற்கொலை செய்துகொண்டதாக வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கு முன்னதாக மாணவி எழுதியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.

அந்தக் கடிதத்தில், பாலியல் தொல்லையால் சாகும் கடைசிப் பொண்ணு நானாகத்தான் இருக்கணும். என்னை யார் இந்த முடிவை எடுக்க வைத்தார்கள் என்று சொல்வதற்கு பயமாக உள்ளது. இந்த பூமியில் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் இப்போது பாதியிலேயே செல்கிறேன். இன்னொரு தடவை இந்த உலகத்தில் வாழ வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும். மன்னிச்சிருங்க. இனி எந்தப் பெண்ணும் என்னை மாதிரி சாகக் கூடாது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கடிதம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் உயிரை மாய்த்துக் கொண்டதாக குற்றம்சாட்டப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து கரூரிலும் அதே போன்று ஒரு மரணம் நேர்ந்திருப்பதால் இது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

இந்த மரணம் குறித்து குறித்து கரூர் மாவட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரையில் இந்த விவகாரத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை.

கரூர் ஜி.எச்.
BBC
கரூர் ஜி.எச்.

கரூர் மாவட்டத்தில் சிறிய அளவிலான கடை ஒன்றை மாணவியின் தாய் நடத்தி வருகிறார். மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள இந்தக் குடும்பத்தில் அண்மையில் சில மரணங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, மாணவியின் தந்தை, பாட்டி உள்பட சிலர் இறந்ததுள்ளனர். இதனால் கூடுதல் மன அழுத்தத்தில் மாணவி இருந்ததாகவும் வெங்கமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரில் மாணவியின் தாய் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவுக்கு மாணவி வந்திருக்கலாம் எனவும் காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

என்ன நடந்தது?'' என வெங்கமேடு காவல்நிலைய ஆய்வாளர் கண்ணதாசனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். மிகவும் நன்றாகப் படிக்கக் கூடிய பெண் அவர். பிளஸ் 2 வகுப்பில் உயிரியல் பாடப் பிரிவை தேர்வு செய்து படித்து வந்துள்ளார். அவருக்கு யாராவது பாலியல் தொல்லை கொடுத்தார்களா என்பதை உறுதி செய்ய எந்தவித ஆதாரங்களும் கிடைக்கவில்லை. புலனாய்வு செய்து வருகிறோம்" என்று பதில் அளித்தார்.

அப்படியானால், தற்கொலைக்கு என்னதான் காரணம்?'' என்றோம். மாணவியின் குடும்பத்தில் அடுத்தடுத்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த 2018ஆம் ஆண்டு மாணவியின் தந்தை இறந்துவிட்டார். கடந்த வருடம் கொல்லிமலையில் உள்ள உறவினர் மகன் ஒருவர், மாணவிடம் தனது காதலை தெரிவித்துள்ளார். இதனைக் கேள்விப்பட்ட மாணவியின் தாயார், நமக்கு இது தேவையில்லை, நன்றாகப் படி' எனக் கூறியுள்ளார். அந்தப் பையனிடம் தொடர்ந்து மாணவி பேசி வந்துள்ளார். அந்தப் பையனும் கடந்த அக்டோபர் மாதம் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். ''

தற்கொலை குறித்த செய்தியும் காரணமா?

''கடந்த 15 நாள்களுக்கு முன்னர் மாணவியின் பாட்டியும் இறந்துவிட்டார். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?' என சக மாணவிகளிடம் கூறி வேதனைப்பட்டுள்ளார். மேலும், கடந்த சில நாள்களுக்கு முன்னர் கோவையில் பிளஸ் 2 மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட செய்திகளையும் மாணவி தொடர்ந்து கவனித்து வந்துள்ளார். ''

''கடந்த சில நாள்களாக கடுமையான மனப்பதற்றத்திலும் இருந்துள்ளார். இதன் வெளிப்பாடாக இப்படியொரு முடிவை அவர் எடுத்துள்ளதாக தெரிய வருகிறது. மாணவியின் தாயார் அளித்துள்ள புகாரிலும் அப்படித்தான் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் மாணவிக்கு மறைமுகமாகவோ நேரடியாகவோ யாரும் பாலியல் தொல்லை கொடுத்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை'' என்கிறார் அவர்.

மேலும், இந்த வழக்கில் ஏ.டி.எஸ்.பி, டி.எஸ்.பி, ஐந்து இன்ஸ்பெக்டர்கள் என தீவிரமாக புலனாய்வு செய்தோம். தன்னை கோவை பிளஸ் 2 மாணவியின் நிகழ்வோடு இந்த மாணவி பொருத்திக் கொண்டதாகவே பார்க்க வேண்டியுள்ளது. இருப்பினும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என்கிறார்.


மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)


பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+