சிகரெட் வாங்கிக் கொடுக்காததால் 13 வயது சிறுவனை கொலை செய்த 2 வாலிபர்கள்
நாசிக்: மகாராஷ்டிரா மாநிலத்தில் சிகரெட் வாங்கி வராததால் 13 வயது சிறுவனை 2 வாலிபர்கள் சேர்ந்து அடித்துக் கொலை செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிச்கில் பிளம்பராக உள்ள ஷாலிகிரம் என்பவரின் மகன் கொலு என்கிற விஷால் பாலிராவ்(13). ஞாயிற்றுக்கிழமை பகல் 11.30 மணிக்கு விஷால் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அரை நிர்வாண கோலத்தில் கிடந்த விஷாலின் முகம் சிதைக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விஷாலின் தந்தை கூறுகையில், சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு விஷால் சிகரெட் வாங்கி வர மறுத்ததால் அவருடன் 2 வாலிபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்றார்.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
விஷாலின் உடலில் இடுப்புக்கு கீழ் ஆடை இல்லாமல் இருந்தது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் இந்த வழக்கில் தெளிவு பிறக்கும் என்றார்.
நாசிக் நகரில் மே மாத இறுதி வரை 21 கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதம் மட்டும் நான்கு கொலை சம்பவங்கள் நடந்துள்ளன.