இப்படிதான் வேக்சின் போடறீங்களா.. ம.பி-இல் 13 வயது சிறுவனுக்கு தடுப்பூசி போட்டதாக மெசேஜ்.. சர்ச்சை!
போபால்: இந்தியாவிலேயே அதிவேகமாகத் தடுப்பூசி செலுத்தும் மாநிலங்களில் ஒன்று எனக் கூறப்படும் மத்தியப் பிரதேசத்தில் 13 வயது சிறுவனுக்கு வேக்சின் போடப்பட்டுள்ளதாக மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை தாக்கம் தற்போது குறைந்துள்ளது. இதனால் வேக்சின் போடும் பணிகளில் அனைத்து மாநிலங்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
நாட்டில் மிக வேகமாக வேக்சின் போடும் பணிகளை மேற்கொண்டு வரும் மாநிலங்களாகப் பீகார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. இந்நிலையில், மபி-இல் 13 வயது சிறுவனுக்கு வேக்சின் போடப்பட்டுள்ளதாக மெசேஜ் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்தியாவில் வேக்சின் பணிகள்
இந்தியாவில் தற்போது 18+ வயதுடையவர்களுக்கு மட்டுமே வேக்சின் போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 12- 18 வயதுடைய சிறார்களுக்கான சைடஸ் காடிலா கொரோனா தடுப்பூசி தற்போது சோதனையில் மட்டுமே உள்ளது. அந்தத் தடுப்பூசிக்கு முறையான அனுமதி கிடைக்க இன்னும் சில மாதங்கள் வரை ஆகும்.

13 வயது சிறுவன்
இந்தச் சூழலில் மத்தியப் பிரதேசத்தின் போபாலை சேர்ந்த ரஜத் டாங்க்ரே என்பவருக்குத் திங்கட்கிழமை இரவு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் அவரது 13 வயது மாற்றுத்திறனாளி மகனுக்கு கொரோனா வேக்சின் போடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், "எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. இது குறித்து புகார் அளிக்க முயன்றபோதும், யாரும் சரியாகப் பதிலளிக்கவில்லை.

எப்படி
எனது மகனுக்கு மாற்றுத்திறனாளிகளுக்குக் கிடைக்கும் உதவித்தொகை கோரி கடந்த வாரம் விண்ணப்பித்திருந்தேன். அந்தத் தரவுகளைக் கொண்டு இப்படி வேக்சின் போடப்பட்டுள்ளதாக மெசேஜை அனுப்பியுள்ளனர்" என்றார். மத்தியப் பிரதேசத்தில் இது மட்டும் தனித்து நடைபெறும் சம்பவம் இல்லை. அங்கு மாநிலத்தில் பலருக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.

பல சம்பவங்கள்
அதேபோல அங்கு சைனேந்திர பாண்டே என்ற நபரின் மொபைலுக்கு அவருக்குத் தொடர்பே இல்லாத மூன்று நபர்களுக்கு வேக்சின் செலுத்தப்பட்டுள்ளதாக மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி வேக்சின் முன்பதிவு செய்தும் போட முடியாதவர்கள், அரசின் இதர திட்டங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் என அனைவருக்கும் கொரோனா வேக்சின் போடப்பட்டுள்ளதாக மெசேஜ் அனுப்பப்படுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் விமர்சனம்
நாட்டிலேயே மிக வேகமாக வேக்சின் போடும் மாநிலங்களில் ஒன்றாக மத்தியப் பிரதேசம் உள்ளது. அங்கு ஜூன் 21ஆம் தேதி 17.42 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டதாகக் கூறப்பட்டது. இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் அரசின் தரவுகளைச் சந்தேகம் எழுப்பும் வகையில் உள்ளதாகக் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. வேகமாக வேக்சின் போடும் மாநிலம் என்ற பெயரைப் பெற மத்தியப் பிரதேச அரசு பொய்யான தரவுகளை அளிப்பதாகக் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
Recommended Video

மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேசத்தில் கடந்த ஜூன் 21 - 14.72 லட்சம் டோஸ்கள், ஜூன் 23- 11.43 லட்சம் டோஸ்கள், ஜூன் 24 7.05 லட்சம் டோஸ்கள், ஜூன் 26- 9.64 லட்சம் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், அதற்கு முன் ஜூன் 18 முதல் 20ஆம் தேதி வரை வெறும் 20 ஆயிரம் வேக்சின்கள் மட்டுமே அங்குப் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications