சிறப்பு அந்தஸ்து நீக்கம்.. நாளையுடன் ஓராண்டு நிறைவு.. ஸ்ரீநகரில் இன்றும் நாளையும் 144 தடை
காஷ்மீர்: காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டு நாளையுடன் ஓராண்டு ஆகும் நிலையில் இன்றும் நாளையும் ஸ்ரீநகர் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலமானது அந்த அந்தஸ்தை இழந்து ஜம்மு காஷ்மீர், லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்தது.

இந்த நடவடிக்கையின் போது அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதமாக இன்டர்நெட் சேவைகள், போன் சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்டோரி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலை சரியானதும் அவர்கள் வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டனர். எனினும் மெகபூபா முஃப்தி உள்ளிட்டோருக்கு வீட்டுக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு நாளையுடன் ஓராண்டு நிறைவடைகிறது.
இதையொட்டி காஷ்மீரில் நாளை கருப்பு தினமாக அனுசரிக்க பிரிவினைவாதிகள் முயற்சித்து வருவதாக தெரிகிறது. மேலும் இவர்கள் வன்முறையில் ஈடுபட்ட அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டம் முழுவதும் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். இதனால் பொது இடங்களில் மக்கள் கூட்டமாக கூடவும் போராட்டம் நடத்தவும் அனுமதி இல்லை.












Click it and Unblock the Notifications