இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கிய பேருந்து.. 15 பேர் உயிரிழப்பு!
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை பிலாஸ்பூரின் ஜண்டூட்டா சட்டமன்றத் தொகுதியின் பாலுஹாட் பகுதியில், தனியார் பேருந்து ஒன்று நிலச்சரிவில் சிக்கியது. இதனால் பேருந்தில் பயணித்தவர்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை 6:50 மணிக்கு இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இறந்தவர்களில் ஒன்பது ஆண்களும், நான்கு பெண்களும் அடங்குவர். இரண்டு குழந்தைகள் காயங்களுடன் எய்ம்ஸ் பிலாஸ்பூரில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிலச்சரிவு குறித்த தகவல் கிடைத்தவுடன், காவல்துறை மீட்புப் படை, ஊர்க்காவல் படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இரண்டு குழந்தைகளை மீட்பதில் உள்ளூர் மக்கள் பெரும் பங்காற்றினர்.
இந்தச் சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்ததாகவும், உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் பிலாஸ்பூர் காவல் கண்காணிப்பாளர் சந்தீப் தவால் தெரிவித்தார். கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையே இந்த நிலச்சரிவுக்கு முக்கிய காரணம் என்று அவர் கூறினார். மேலும், காணாமல் போன எட்டு வயது சிறுவனைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
துணை முதலமைச்சர் முகேஷ் அக்னிஹோத்ரி இந்த சம்பவம் குறித்த கூறுகையில், "இமாச்சலப் பிரதேசத்தில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது. 15 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு குழந்தைகள் பத்திரமாக உள்ளனர். மேலும் ஒரு குழந்தையைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. நிலச்சரிவு காரணமாகவே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. பேருந்தின் மீது மண் சரிந்து விழுந்ததால், அது நசுங்கியது" என்று கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார். காயமடைந்தவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் மோடி கூறினார்.
முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு இந்தச் சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்யும் என்று உறுதியளித்தார். மீட்புப் பணிகளை விரைவுபடுத்துமாறும், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பிலாஸ்பூர் காவல் கண்காணிப்பாளர் சந்தீப் தவால் சம்பவம் குறித்து மேலும் கூறுகையில், "தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன், மோப்ப நாய்களைக் கொண்டு தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. உயிரிழப்பு மற்றும் காயங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பில்லை" என்று தெரிவித்தார். ராஜேஷ் குமார் (34), ஷரிஃப் கான் (25), சுன்னி லால் (46), ராஜீவ் என்ற சோனு, கிருஷ்ண லால், நரேந்தர் சர்மா ஆகியோர் உயிரிழந்தவர்களில் அடையாளம் காணப்பட்டனர்.
சுமார் 25-30 பேர் பேருந்தில் பயணித்ததாக துணை முதல்வர் அக்னிஹோத்ரி தெரிவித்தார். விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்வதாகவும் அவர் கூறினார். மீட்புப் பணிகளில் கனரக இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு, கடினமான நிலப்பரப்பிலும், அவ்வப்போது பெய்யும் மழையிலும் இடிபாடுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications