உத்தரபிரதேசத்தில் 2 நாட்களில் 15 என்கவுன்டர்- தெறித்து ஓடும் சமூகவிரோதிகள்
உத்தரபிரதேசத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் 15 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அலஹாபாத்: உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கை சீர்ப்படுத்தும் விதமாக கடந்த 2 நாட்களில் மட்டும் 15 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
சட்டம்-ஒழுங்கு மோசமாகி வருவதை தடுக்கும் வகையில், அம்மாநில காவல்துறை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருவதிலிருந்து சமூகவிரோதிகளை ஒடுக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சமூகவிரோதிகள் என்ற பெயரில் அரசுக்கு எதிராக புரட்சி செய்யும் நபர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாலியல் பலாத்காரம், வன்முறை, கொலை, கொள்ளை போன்றவற்றால் அங்கு சட்டம்-ஒழுங்கு பெருமளவு பாதிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக தகவல்கள் தினமும் ஊடகங்களில் வெளியாகி வரும் நிலையில், மறுபுறம் குற்றங்களை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள அரசியல் அழுத்தம் காரணமாக போலீசார் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.
அந்தவகையில், கடந்த 2 நாட்களில் மட்டும் உத்தரபிரதேசத்தில் 15 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின்போது 12க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்துள்ளனர். கான்பூர், முசாபர் நகர், லக்னோ உள்ளிட்ட நகரங்களில் இந்த என்கவுன்டர்கள் நடந்துள்ளன.
இதுமட்டுமின்றி, தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.