உலகில் ஃபெமினிசம் ஒழிய வேண்டும்.. 150 ஆண்கள் இணைந்து கங்கையில் நடத்திய யாகம்.. அடடே!
உலகில் ஃபெமினிசம் எனப்படும் பெண்ணியவாதம் ஒழிய வேண்டும் என்று 150 ஆண்கள் ஒன்றாக சேர்ந்து கங்கை கரையில் பூஜை நடத்தி இருக்கிறார்கள்.
காசி: உலகில் ஃபெமினிசம் எனப்படும் பெண்ணியவாதம் ஒழிய வேண்டும் என்று 150 ஆண்கள் ஒன்றாக சேர்ந்து கங்கை கரையில் பூஜை நடத்தி இருக்கிறார்கள்.
பெண்களுக்கான சமஉரிமைக்காக குரல் கொடுப்பவர்களையும், சம வாய்ப்பு கேட்கும் பெண்களை ஃபெமினிஸ்டுகள் என்று இந்த சமுதாயம் அழைக்கிறது. தமிழகத்தில் இப்போதுதான் இவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறார்கள்.
பல விவாதங்கள், உரையாடல்களுக்குப் பின் இப்போதுதான் இவர்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது என்று இந்த சமுதாயத்திற்கு தெரிய வருகிறது. இந்த நிலையில்தான், இவர்களுக்கு எதிராக ஆண்களின் இயக்கம் ஒன்று அமைதியாக செயல்படுவது தெரிய வந்துள்ளது.
என்ன இயக்கம் இது
இந்திய குடும்பங்களை காப்பாற்றுவோம் இயக்கம் (Save Indian Family Foundation- SIFF) என்ற அமைப்புதான் இந்த செயலை செய்து வருகிறது. இதில் ஆண்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஆண்களுக்கு எதிராக பெண்கள் செய்யும் கொடுமைகளை (ஙே?) தட்டிக்கேட்க உருவாக்கப்பட்ட அமைப்புதான் இது. இவர்களின் ஒரே குறிக்கோள், இந்த உலகில் இருந்து ஃபெமினிசத்தை அழிக்க வேண்டும்.
தொடங்கியது எப்போது
ராஜேஷ் வக்காரியா என்ற நபர்தான் இந்த இயக்கத்தை தொடங்கியது. 2005ல் இவரது முன்னாள் மனைவி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இவர் மீது புகார் அளித்துள்ளார். இதனால் இவர் 5 வருடம் வழக்குகளை சந்திக்க நேர்ந்துள்ளது. இந்த மனஉளைச்சலில் ஆண்களுக்கு என்று சட்டம் இல்லை என்று கூறி, இந்த இயக்கத்தை உருவாக்கினார்.
பெரிதாக வளர்ந்துள்ளது
இந்த இயக்கம் தொடங்கப்பட்டு 13 வருடம் ஆகிறது. தற்போது இதில் 4000 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்தியா முழுக்க 200க்கும் அதிகமான அலுவலகங்கள் இதற்காக செயல்படுகிறது. இதில் இருக்கும் உறுப்பினர்கள் எல்லோரும் எதோ ஒரு வகையில் மனைவியால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. இதில் இன்னும் உறுப்பினர்களை சேர்க்க இவர் யோசித்து வருகிறார்.
பொதுவாக என்ன செய்கிறார்கள்
இவர்கள், ஆண்களுக்கு வழக்கு ரீதியான பிரச்சனைகளில் உதவுகிறார்கள். பெண்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். சில சட்டங்கள் பெண்களுக்கு எப்படி ஆதரவாக உள்ளது, ஆண்களுக்கு எப்படி எதிராக உள்ளது என்று பேரணி எல்லாம் நடத்தி எடுத்துக் கூறுகிறார்கள். அதோடு ஆண்களுக்கு சாதகமாக சட்டம் உருவாக்க, கோரிக்கையும் வைத்து வருகிறார்கள்.
இவர்கள் செய்யும் வேலைகள்
ஆனால் இவர்கள் சில கோமாளித்தனமான வேலைகளையும் செய்கிறார்கள். வருடம் ஒரு முறை சூர்ப்பனகை உருவ பொம்மையில் மூக்கை வெட்டுகிறார்கள். இது பெண்களின் ஆணவத்தை அடக்க செய்வதாக கூறுகிறார்கள். அதோடு பெண் அமைச்சர்களுக்கு ராக்கி கட்டி விடுகிறார்கள். நீங்க மட்டும்தான் ராக்கி காட்டுவீங்களா நாங்களும் கட்டுவோம் என்று களத்தில் குதித்துள்ளனர்.
பூஜை நடத்தினார்கள்
இந்த நிலையில்தான் விவாகரத்து பெற்ற 150 ஆண்கள் சேர்ந்து காசி கங்கை கரையில் பூஜை நடத்தி உள்ளனர். தங்களது பழைய திருமண தோஷம் போக வேண்டும் என்று பூஜை நடத்தி உள்ளனர். அந்த பெண்கள் மூலம் தங்களின் உடலில் தீய சக்தி உள்ளது என்று கூறி இதில் பூஜை செய்து இருக்கிறார்கள். இந்தியா முழுக்க பல்வேறு பகுதிகளில் இருந்து இதற்காக ஆண்கள் வந்துள்ளனர்.
ஃபெமினிசம் ஒழிய வேண்டும்
இந்த 150 ஆண்களும் ஒரே நேரத்தில் கங்கை ஆற்றில் இறங்கியுள்ளனர். இறங்கி ஒரே நேரத்தில் பெண்ணியவாதம் ஒழிய வேண்டும் என்று கோஷம் எழுப்பியுள்ளனர். 100 முறை இதை மீண்டும் மீண்டும் சொல்லியுள்ளனர். இந்த சம்பவம் தற்போது உலகம் முழுக்க வைரலாகி உள்ளது.