உ.பியில் கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் பலி... 40 பேர் கவலைக்கிடம்... 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் கள்ளாச்சாராயம் குடித்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் ஈதா பகுதியில் உள்ளது லகாரி தார்வாஜா மற்றும் அஜ்ன்ட் லாகிரா கிராமங்கள். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம், அதே பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தைக் குடித்துள்ளனர்.
சிறிது நேரத்தில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் அனைவருக்கும் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

17 பேர் பலி...
ஆனால், அவர்களில் சிகிச்சைப் பலனின்றி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பார்வை பறிபோனது...
கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100க்கும் அதிகமானது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பலருக்கு பார்வை பறி போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சாலை மறியல்...
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த அப்பகுதி மக்கள் கள்ளச்சாராய கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஈதா-பருக்காபாத் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

5 அதிகாரிகள் சஸ்பெண்ட்...
அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக மல்லிகாபாத் ஆய்வாளர், மதுவிலக்குப்பிரிவு போலீஸ் உள்பட 5 பேரை அம்மாநில அரசு சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

கைது...
இது ஒருபுறம் இருக்க, கள்ளச்சாராயம் காய்ச்சிய விவகாரம் தொடர்பாக முக்கிய நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்க வேண்டும் என அம்மாவட்ட நீதிபதி அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications