தெலுங்கானாவில் வீட்டில் டாய்லெட் இல்லாததால் +1 மாணவி தீக்குளித்து தற்கொலை
ஹைதராபாத்: தெலுங்கானாவில் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் 17 வயது மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள குண்டலா கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா(17). பிளஸ் 1 படித்து வந்தார். அவரது பெற்றோர் விவசாயக் கூலிகளாக உள்ளனர். வறுமையில் வாடும் அவரின் வீட்டில் கழிப்பறை வசதி இல்லை.
இதனால் வெட்டவெளியில் இயற்கை உபாதை கழிக்க வேண்டிய நிலை. இது ரேகாவுக்கு பிடிக்கவில்லை. வீட்டில் கழிப்பறை கட்டிக் கொடுக்குமாறு அவர் பெற்றோரை கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் தற்போதைக்கு பணம் இல்லை பிறகு பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
வெட்டவெளியில் இயற்கை உபாதை கழிப்பதை விரும்பாத ரேகா நேற்று வீட்டில் தனியாக இருக்கையில் தனது உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் அவர் உடல் கருகி பலியானார்.
கழிப்பறை இல்லாததால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.