காஷ்மீரில் தொடரும் பயங்கரவாதிகளின் அட்டூழியம்.. பண்டிட் ஆசிரியர்களை பணியிடமாற்றம் செய்த அரசு
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், அரசு முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
காஷ்மீரில் தொடர்ந்து பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது. இது அங்கு வாழும் மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஒருபுறம் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவ முயல்வதும், அதை நமது ராணுவ வீரர்கள் முறியடித்து வரும் நிகழ்வுகளும் தொடர்கிறது.

தாக்குதல்
மறுபுறம் காஷ்மீரில் வேலை செய்யும் அரசு ஊழியர்களைக் குறி வைத்து பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்களும் அதிகரித்து வருகிறது. இரு நாட்களுக்கு முன்பு, காஷ்மீரின் அரேஹ் மோகன்போரா கிளையில் உள்ள எலாக்கி தேஹாட்டி வங்கியின் மேலாளராக பணியாற்றி வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த விஜய் குமார் என்பவரைப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவம் நடந்து வெறும் 12 மணி நேரத்திற்குள் புட்காமில் இரு தொழிலாளர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது.

8 பேர் பலி
காஷ்மீரில் இதுபோன்ற தாக்குதல் நடைபெறுவது இது முதல் முறை இல்லை. கடந்த சில வாரங்களாகவே இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. கடந்த வாரம் குல்காம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டார். மே 12இல் புத்காம் மாவட்ட தாசில்தார் அலுவலக எழுத்தர் ராகுல் பட் படுகொலை செய்யப்பட்டார். மே 1ஆம் தேதி முதல் மட்டும் காஷ்மீரில் 3 போலீசார், 5 பொதுமக்கள் உட்பட 8 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video

ஹைபிரிட் பயங்கரவாதிகள்
இதுபோன்ற படுகொலைகள் நிகழ்த்துவது பயங்கரவாதிகள் இல்லை! மாறாக ஹைபிரிட் பயங்கரவாதிகள் ஆகும். சாதாரண மக்களாக இருக்கும் இவர்கள், கொடூர பயங்கரவாத தாக்குதல் நடத்தும் அளவுக்கு மூளைச்சலவை செய்யப்பட்டு இருப்பார்கள். மக்களுடன் மக்களாக இருப்பதால் இவர்களைக் கண்டறிவதும் கடினமான ஒன்றாகவே இருக்கிறது.

போராட்டம்
இது காஷ்மீரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதால் காஷ்மீர் அரசு ஊழியர்கள் அனைவரும் இப்போது தங்களைச் சொந்த மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்யும்படி போராட்டத்தில் குதித்தனர். காஷ்மீரில் இப்போது அரசு ஊழியர்களைக் குறி வைத்து நடக்கும் கொலைகள் அதிகரித்துள்ளதால் இப்போதைய சூழலில் நாங்கள் பணிக்குத் திரும்பப் போவதில்லை என்று கூறினர்.

முக்கிய உத்தரவு
இந்நிலையில், காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், ஸ்ரீநகரில் பணியமர்த்தப்பட்ட 177 காஷ்மீரி பண்டிட் ஆசிரியர்களை வேறு பாதுகாப்பான இடங்களுக்குப் பணி இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் காஷ்மீர் பண்டிட் சமூகம் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் குறிவைத்து நடைபெறும் தாக்குதல்களால் அங்கு அமைதியற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் தான் காஷ்மீர் பாதுகாப்பு நிலை குறித்து ஆய்வு செய்ய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications