உத்தரகாண்ட் ஷாக்.. 2 மாதங்களில் 2,382 போலீசாருக்கு பாஸிட்டிவ்.. 90% பேர் 2 டோஸ்களையும் பெற்றவர்கள்!
டேராடூன்: உத்தரகாண்டில் 2 மாதங்களில் 2,382 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் புனித நகரமான உத்தரகாண்டிலும் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்தது. தினமும் அதிக பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்தன.
கடந்த ஏப்ரல் மாதம் உத்தரகாண்டின் ஹரித்வாரில் நடந்த பிரசித்தி பெற்ற கும்பமேளாவில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.

போலீசாருக்கு கொரோனா தொற்று
இதில் சிலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவுவதற்கு காரணமே கும்பமேளாதான் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினார்கள். இந்த நிலையில் உத்தரகாண்டில் கடந்த 2 மாதங்களில் 2,382 போலீசாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

2,382 பேருக்கு கொரோனா
கடந்த செய்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட இந்த தரவின்படி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் பணியில் இருந்த 2,382 போலீசாருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 2,204 பேர் ஏற்கனவே கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் காரணமாக 5 போலீசாரும் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு டோஸ்களையும் போட்டு கொண்டவர்கள்
இறந்த ஐந்து போலீஸ்காரர்களில் இருவருக்கு மற்ற நோய்கள் இருந்துள்ளன. மற்ற மூவரும் தடுப்பூசி போடப்படவில்லை. இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 2,382 போலீஸ்காரர்களில் 90 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் ஏற்கனவே போட்டுக் கொண்டவர்கள் என்பதுதான்.

உயர் அதிகாரி விளக்கம்
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது குறித்து உத்தரகாண்ட் போலீஸ் டி.ஐ.ஜி.யும் (சட்டம் ஒழுங்கு பிரிவு), காவல்துறை தலைமை செய்தித் தொடர்பாளருமான நிலேஷ் ஆனந்த் பார்னேவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் 'பாதிப்புகள், உயிரிழப்புகள் மிக குறைவுதான். தடுப்பூசி டோஸ்களை பெற்றபிறகு மீண்டும் கொரோனா வராது என்று உத்தரவாதம் அளிக்க முடியாது என்று தடுப்பூசி உற்பத்தியாளர்களே கூறியதை நாம் இங்கு நினைவுபடுத்தி பார்க்க வேண்டும்' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications